உள்ளூர் செய்திகள்

காட்டெருமை சுட்டுக்கொலை: 4 பேரிடம் வனத்துறையினர் விசாரணை

Published On 2023-10-21 14:55 IST   |   Update On 2023-10-21 14:55:00 IST
  • காட்டெருமையை சுட பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி நாட்டு துப்பாக்கி இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.
  • பல கோணங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

அருவங்காடு,

குன்னூர் அருகே உள்ள சேலாஸ் பாலாடா செல்லும் சாலையில் 4 வயது மதிக்கதக்க ஆண் காட்டெருமை ஒன்று தலையில் காயத்துடன் இறந்து கிடப்பதாக குந்தா வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது,

இதனைத் தொடர்ந்து குந்தா வனச்சரகர் சீனிவாசன் மற்றும் மற்றும் வனத்துறையினர் கொலக்கம்பை சப் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் சம்பவ இடத்திற்கு வந்து இறந்து கிடந்த காட்டெருமையை பார்வையிட்டனர்.

அதன் பின்பு கால்நடை மருத்துவர் பாலமுருகன் மற்றும் சதீஷ்குமார் ஆகியோர் வரவழைக்கப்பட்டு காட்டெருமை பிரேத பரிசோதனை செய்தனர்.

அப்போது காட்டு எருமையின் தலையில் இருந்து நாட்டுத் துப்பாக்கியில் பயன்படுத்தும் தோட்டா மற்றும் கடினமான ரப்பர் பொருள் அகற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இறந்த காட்டெருமையின் உடல் உறுப்புகளை ஆய்வுக்காக தடய அறிவியல் துறை ஆய்வகத்திற்க்கு அனுப்பி ஆய்வுக்கு பின் விபரம் தெரிவிக்கப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

மேலும் காட்டெருமை மரணம் குறித்து குந்தா வனத்துறையினர் யாரேனும் இறைச்சிக்காக காட்டெருமையை வேட்டையாடினார்களா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனை அடுத்து சந்தேகத்தின் பெயரில் கெந்தலா மற்றும் கொல்லிமலை பகுதியை சேர்ந்த 4 பேரிடம் வனத்துறையினர் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் காட்டெருமையை சுட பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி நாட்டு துப்பாக்கி இல்லை என்பதும் தெரியவந்துள்ளது. அது ஒரிஜினல் துப்பாக்கி என்றும், துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் எங்கிருந்து வாங்கப்பட்டது என்பது குறித்தும் பல கோணங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News