மேலப்பாளையம் அருகே தொழிலாளி வீட்டுக்கு பெட்ரோல் ஊற்றி தீ வைத்தவர் கைது
- மர்ம நபர் ஒருவர் சுடலைமணி வீட்டின் கதவுக்கு தீ வைத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.
- விசாரணையில், தீ வைத்து சென்றது முருகன் என்பது தெரிய வந்தது.
நெல்லை:
நெல்லையை அடுத்த மேலப்பாளையம் மேலநத்தம் பகுதியில் சேர்ந்தவர் சுடலை மணி. தொழிலாளி. நேற்று இரவு இவரது வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் சுடலைமணி வீட்டின் கதவுக்கு தீ வைத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றார். உடனே வீட்டில் இருந்த அனைவரும் எழுந்து தீயை அணைத்து விட்டனர். இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதையடுத்து சுடலைமணி மேலப்பாளையம் போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது வீட்டு கதவின் அருகில் பாட்டில் துகள்கள் சிதறி கிடந்தது. இதனால் வீட்டுக்கு வந்த மர்ம நபர்கள் யார்? அவர்கள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனரா? அல்லது பெட்ரோல் குண்டு ஏதேனும் வீசிவிட்டு சென்றார்களா? என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து நடத்திய விசாரணையில், அதே பகுதியில் கீழத்தெருவில் வசிக்கும் டேங்கர் வைத்து தண்ணீர் விற்பனை செய்யும் முருகன் (வயது 40) என்பவர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து சென்றது தெரிய வந்தது. சமீபத்தில் முருகனின் குழந்தை சுடலை மணிக்கு வீட்டுக்கு விளையாட சென்றதில் ஏற்பட்ட தகராறு காரணமாக ஆத்திரத்தில் முருகன் தீ வைத்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.