உள்ளூர் செய்திகள்

திராவிட மாடல் ஆட்சியில் 1 கோடியே 32 லட்சம் இளைஞர்கள் வேலை இல்லாமல் தவிப்பு: அன்புமணி ராமதாஸ்

Published On 2023-02-03 02:32 GMT   |   Update On 2023-02-03 02:32 GMT
  • குட்கா, போதை பொருட்களை தடை செய்ய வேண்டும்.
  • பா.ம.க. மாடல் ஆட்சியில் மாணவர்களின் படிப்புக்கு ஒரு பைசாகூட கட்டணம் செலுத்த தேவையில்லை.

திருவண்ணாமலை :

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு மாங்கால் கூட்ரோடு பகுதியில் பா.ம.க. 2.O விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டு பேசியதாவது:-

தமிழகத்தில் சிப்காட் நிலம் கொடுத்த உள்ளூர் இளைஞர்களுக்கு 80 சதவீத வேலை வாய்ப்பு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். குட்கா, போதை பொருட்களை தடை செய்ய வேண்டும். இளைஞர்களின் நலன் கருதி ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு கவர்னர் ஒப்புதல் வழங்க வேண்டும். இல்லையேல் மிகப்பெரிய போராட்டத்தை பா.ம.க. கையிலெடுக்கும்.

மேலும் தற்போதைய அரசுக்கு புதிய கல்வி திட்டம், வேலை வாய்ப்பு உருவாக்குவது உள்ளிட்டவைகள் குறித்து எதுவும் தெரியாமல் இருப்பதால் தமிழகத்தில் படித்த இளைஞர்கள் 1 கோடியே 32 லட்சம் பேர் வேலையில்லாமல் தவிக்கின்றனர். இதற்கு காரணம் திராவிட மாடல் ஆட்சியே.

பா.ம.க. மாடல் ஆட்சியில் மாணவர்களின் படிப்புக்கு ஒரு பைசாகூட கட்டணம் செலுத்த தேவையில்லை. இலவச உயர்தர மருத்துவ சேவை அளிக்கப்படும்.

பா.ம.க. மாடல் ஆட்சியில் முதல் கட்டமாக ஒரு லட்சம் கோடி ரூபாயை தமிழகத்திற்கு நீர் மேலாண்மைக்கு ஒதுக்கி தமிழகத்தில் அனைத்து ஆறுகளிலும் தடுப்பணை கட்டி வருங்கால சந்ததியினருக்கு வளமான தமிழகத்தை விட்டுச்செல்லும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News