மூலைக்கரைப்பட்டி அருகே பாலம் கட்டுவதற்காக தோண்டிய பள்ளத்தில் விழுந்து தொழிலாளி பலி
- மணிராஜ் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
- கூந்தங்குளம் பகுதியில் பாலம் அமைப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டு இருந்தது.
நெல்லை:
நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள முருகன்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் மணிராஜ்(வயது 35). இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
மூலைக்கரைப்பட்டி அருகே கூந்தங்குளம் பகுதியில் புதிதாக தார்ச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. அதில் ஒரு இடத்தில் பாலம் அமைப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டு இருந்தது. நேற்று இரவு வேலைக்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் மணிராஜ் வீட்டுக்கு சென்று கொண்டி ருந்தார். அப்போது அந்த பள்ளத்தில் எதிர்பாராத விதமாக தடுமாறி மோட்டார் சைக்கிளுடன் விழுந்தார்.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த மணிராஜ், அங்கிருந்து எழுந்திருக்க முடியாமல் மயங்கி விழுந்து இறந்தார். இன்று காலை அந்த வழியாக சென்ற வர்கள் அவர் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக மூலக்கரைப்பட்டி போலீ சாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் அங்கு விரைந்து சென்று இறந்து கிடந்த மணிராஜ் உடலை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
பாலம் கட்டுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தை சுற்றிலும் எவ்விதமான தடுப்புகளோ, எச்சரிக்கை பலகைகளோ அல்லது ஒளிரும் ஸ்டிக்கர்களோ வைக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் புகார் கூறி வருகின்றனர்.