கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ஆயுள் தண்டனை கைதி பிடிபட்டார்
- செட்டிமண்டபம் பைபாஸ் சாலையில் செல்வகுமார் என்பவர் படுகொலை செய்யப்பட்டார்.
- தண்டனையை எதிர்த்து மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்து விடுதலையாகினர்.
கும்பகோணம்:
கும்பகோணம் அடுத்த திருவிடைமருதூர் காவல் நிலைய சரகத்தில் கடந்த 2013-ம் ஆண்டு செட்டிம ண்டபம் பைபாஸ் சாலையில் செல்வகுமார் என்பவர் படுகொலை செய்யப்பட்டார். தொடர்ந்து, இந்த கொலைக்கு பழிக்கு பழியாக சரவணன் என்பவரும் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கு தொடர்பாக லாலி மணிகண்டன், பூபதி, மகாமணி ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டு தஞ்சை 2-வது கூடுதல் மாவட்ட அமர்வு கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்தது. இந்த வழக்கில் 3 பேருக்கும், கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இவர்கள் இந்த தண்டனையை எதிர்த்து மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்து விடுதலையாகினர்.
அரசு இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, தஞ்சை 2-வது கூடுதல் மாவட்ட அமர்வு கோர்ட்டு வழங்கிய ஆயுள் தண்டனையை உறுதி செய்தது.
அதனைத்தொடர்ந்து, மற்றொரு வழக்கில் கைதாகி சிறையில் இருந்த லாலி மணிகண்டனை போலீசார் கைது செய்தனர். மேலும், தலைமறைவாக இருந்த பூபதி மற்றும் மகாமணியை பிடிக்க திருவிடைமருதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு அவர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில் தனிப்படை போலீசார், தலைமறைவாக இருந்த மகாமணியை கைது செய்து தஞ்சை 2-வது கூடுதல் மாவட்ட அமர்வு கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.