உள்ளூர் செய்திகள்

மேட்டுப்பாளையத்தில் நள்ளிரவில் முறிந்து விழுந்த மரம்

Published On 2023-09-06 09:10 GMT   |   Update On 2023-09-06 09:10 GMT
  • விலங்குகள் நடமாடும் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு
  • வனத்துறையினர் சாலையில் விழுந்த மரத்தை வெட்டி அகற்றினர்

மேட்டுப்பாளையம்,

மேட்டுப்பாளையம் பகுதியில் கடந்த இரு மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பொதுமக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலையில் இருந்தனர். இதனால் நிலத்தடி நீர் குறைந்து விவசாயத்திற்கு போதிய அளவில் தண்ணீர் இல்லாத சூழல் ஏற்பட்டது. இதனால் காய்கறிகள் விலை உச்சத்தில் இருந்து வந்தன. மேலும் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகி வந்தனர்.

இந்தநிலையில் கடந்த 4 நாட்களாக மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இதனால் வெப்ப சலனம் குறைந்துள்ளது. நேற்று இரவு மேட்டுப்பாளையம் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த மழையால் பத்ரகாளியம்மன் கோவில் இருந்து தேக்கம்பட்டி செல்லும் சாலையில் மரம் முறிந்து விழுந்தது. இதனால் இப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் இப்பகுதியில் யானைகள் நடமாட்டம் இருக்கும் பகுதி என்பதால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர்.

தகவலறிந்த மேட்டுப்பாளையம் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலையில் விழுந்திருந்த மரத்தை வெட்டி அகற்றினர். இதன்பின் இப்பகுதியில் மீண்டும் போக்குவரத்து இயக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டுநர்கள் நிம்மதி அடைந்தனர்.

Tags:    

Similar News