உள்ளூர் செய்திகள்

கோவையில் ரெயில் தண்டவாளம் அருகே தலை சிதைந்த நிலையில் வாலிபர் பிணம்

Published On 2023-08-30 14:41 IST   |   Update On 2023-08-30 14:41:00 IST
  • போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
  • கொலை செய்து உடல் வீச்சா? என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கிறார்கள்.

குனியமுத்தூர்,

கோவை சுந்தராபுரம் அருகே உள்ள கணேசபுரம் ரெயில்வே தண்டவாளம் அருகே வாலிபர் ஒருவர் ரத்தக்காயங்களுடன் பிணமாக கிடப்பதாக சுந்தராபுரம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் வந்தது.

இதுபற்றி அவர்கள் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் நேரில் சென்று பார்வையிட்டனர்.

அப்போது தண்டவாளத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் 30 வயது மதித்தக்கத்தக்க வாலிபர் பிணமாக கிடந்தார். அவரது தலை அடையாளம் காண முடியாத நிலையில் சிதைந்து காணப்பட்டது. ஒரு கையும் துண்டிக்கப்பட்டு இருந்தது. அந்த நபர் கட்டம் போட்ட கருப்பு கலர் லுங்கி அணிந்திருந்தார்.

அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்று தெரிய வில்லை. அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்த நபர் ரெயிலில் அடிபட்டு இறந்தாரா அல்லது யாராவது கொலை செய்து இங்கு கொண்டு வந்து வீசிச் சென்றார்களா? என்று தெரியவில்லை. இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். பலியான நபர் லுங்கி அணிந்திருந்ததால் அவர் உள்ளூரைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரிக்கப்பட்டது.

ஆனால் உள்ளூரில் எந்தவொரு துப்பும் கிடைக்கவில்லை. இதனால் மாவட்டத்தில் வேறு யாராவது மாயமாகி உள்ளார்களா? என்பது பற்றி போலீசார் விசாரிக்கிறார்கள்.

Tags:    

Similar News