ஏர்வாடியில் தந்தையை தாக்கிய வாலிபர் விஷம் குடித்து தற்கொலை
- கடந்த 1 மாதத்திற்கு முன்பு செல்வராஜ் தனது மனைவி மற்றும் குழந்தைகளை சந்தித்து பேசினார்.
- விஷம் குடித்த நிஷாந்த் மயங்கி விழுந்தார்.
களக்காடு:
ஏர்வாடி ரஸ்தா, சேனையர் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது50). இவரது மனைவி அம்பிகா (44). செல்வராஜிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது.
இதனால் அவர் வேலைக்கு செல்லாமல் மது அருந்தியபடி இருந்ததால், அவருக்கும் அவரது மனைவி அம்பிகாவிற்கும் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன் தகராறு ஏற்பட்டு, இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களது குழந்தைகள் அம்பிகாவின் பராமரிப்பில் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த 1 மாதத்திற்கு முன்பு செல்வராஜ் தனது மனைவி மற்றும் குழந்தைகளை சந்தித்து பேசினார். அப்போது ஆத்திரத்தில் அவரது மகன் நிஷாந்த் (19) அவரை தாக்கினார். இதையடுத்து தந்தையை தாக்கி விட்டோமே என்று நிஷாந்த் மனம் உடைந்து காணப்பட்டார்.
இதற்கிடையே கடந்த 19-ந் தேதி நண்பர்களை பார்க்க செல்வதாக வீட்டில் கூறி விட்டு சென்ற நிஷாந்த் விஷம் குடித்தபடி வீட்டிற்கு திரும்பி வந்து, மயங்கி விழுந்தார். உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இதுபற்றி ஏர்வாடி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ஆதம்அலி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.