உள்ளூர் செய்திகள்

நெல்லை சந்திப்பில் ஓட்டல் மேலாளருக்கு அரிவாள் வெட்டு

Published On 2023-04-15 09:09 GMT   |   Update On 2023-04-15 09:09 GMT
  • ரமேஷ் தனியார் ஓட்டலில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார்.
  • மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் ரமேசை சரமாரியாக வெட்டினர்.

நெல்லை:

நெல்லை மாவட்டம் களக்காட்டை சேர்ந்தவர் ரமேஷ்(வயது 46). இவர் மத்திய ரிசர்வ் போலீசாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தற்போது நெல்லை ஸ்ரீபுரம் எஸ்.என்.ஹைரோட்டில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார்.

இதனால் அவர் தாழையூத்து அருகே சங்கர் நகரில் குடும்பத்துடன் தங்கி இருந்து வேலைக்கு சென்று வருகிறார். நேற்று நள்ளிரவு ஓட்டலில் வேலையை முடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் அவர் வீடு திரும்பினார்.

அரிவாள் வெட்டு

ஸ்ரீபுரத்தில் இருந்து தச்சநல்லூருக்கு ஊருடையார்புரம் சாலையில் அவர் சென்றபோது அவரை மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் கும்பல் வழி மறித்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த கும்பல் ரமேசை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றது.

இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து சந்திப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் அங்கு விரைந்து சென்று ரமேசை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக தச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரமேஷ் குடும்பத்தினருக்கு சொந்தமான கோவில் ராதாபுரம் அருகே உள்ள மருதப்பபுரம் கிராமத்தில் உள்ளது. அந்த கோவிலில் கடந்த மாதம் 27-ந்தேதி ரமேஷ் சாமி கும்பிட சென்றுள்ளார்.

வழக்குப்பதிவு

அப்போது அவருக்கும், அதே பகுதியை சேர்ந்த வர்களுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக ராதாபுரம் போலீசார் இரு தரப்பினர் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

அந்த ஆத்திரத்தில் எதிர்தரப்பினை சேர்ந்த 2 பேர் ரமேசை வெட்டிக்கொலை செய்ய முயன்று இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்தில் வக்கீல் ஒருவருக்கும் தொடர்பு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து போலீசார் அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News