மனைவி தலையில் கல்லை போட்டு கொல்ல முயற்சி- தொழிலாளிக்கு போலீஸ் வலைவீச்சு
- மனைவியின் தலையில் கல்லை தூக்கி போட்டு விட்டு தப்பி ஓடிவிட்டார்.
- மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் லட்சுமி சேர்க்கப்பட்டார்.
ஓசூர்:
ஓசூர் தாலுகா ஆவலப்பள்ளி அருகே உள்ள காளஸ்திபுரத்தைச் சேர்ந்தவர் முனிராஜ் (வயது 38). கூலித் தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி (35). இவர்களுக்கு திருமணம் ஆகி 15 ஆண்டுகள் ஆகிறது. 4 குழந்தைகள் உள்ளனர். முனிராஜூக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்தார்.
நேற்று முன்தினம் காலை லட்சுமி வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அந்த நேரம் அங்கு வந்த முனிராஜ், மனைவியின் தலையில் கல்லை தூக்கி போட்டு விட்டு தப்பி ஓடிவிட்டார்.
இதில் பலத்த காயமடைந்த லட்சுமியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் லட்சுமி சேர்க்கப்பட்டார். இது குறித்து லட்சுமியின் தம்பி ராஜப்பா (26) பாகலூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் கொலை முயற்சி பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து முனிராஜை தேடி வருகிறார்கள்.