நெல்லை அருகே விஷம் குடித்து தொழிலாளி சாவு- மனைவி, குழந்தைகளுக்கு பாளை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
- நேற்று இரவு வீட்டில் கனகராஜ், மஞ்சு, தர்ஷன், இலக்கியா ஆகிய 4 பேரும் விஷம் குடித்த நிலையில் மயங்கி கிடந்தனர்.
- கனகராஜ் உள்பட 4 பேரும் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்தது தெரியவந்தது.
நெல்லை:
நெல்லையை அடுத்த விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள அடையகருங்குளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் கனகராஜ், தொழிலாளி. இவரது மனைவி மஞ்சு. இவர்களுக்கு தர்ஷன் (வயது 8) என்ற மகனும், இலக்கியா (7) என்ற மகளும் உள்ளனர்.
விஷம் குடித்தனர்
நேற்று இரவு வீட்டில் கனகராஜ், மஞ்சு, தர்ஷன், இலக்கியா ஆகிய 4 பேரும் விஷம் குடித்த நிலையில் மயங்கி கிடந்தனர். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் மற்றும் போலீசார் விரைந்து சென்று 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கனகராஜ் பரிதாபமாக உயிரிழந்தார்.
மற்ற 3 பேருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக பாளை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
காரணம் என்ன?
போலீசார் விசார ணையில் கனகராஜ் உள்பட 4 பேரும் குளிர் பானத்தில் விஷம் கலந்து குடித்தது தெரிய வந்தது. கனகராஜிக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்ததாகவும், அதனை அவரது தந்தை கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும் கனகராஜிக்கு தனது தந்தையுடன் சொத்து பிரச்சினை இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதன் காரணமாக மனம் உடைந்து அவர் குடும்பத்துடன் விஷம் குடித்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.