உள்ளூர் செய்திகள்

கோவையில் முன்விரோதத்தில் வாலிபரை காரில் கடத்த காத்திருந்த 4 பேர் கும்பல் கைது

Published On 2023-08-02 15:03 IST   |   Update On 2023-08-02 15:03:00 IST
  • வேளாங்கண்ணி ஆலயம் அருகே முக கவசம் அணிந்தபடி 5 பேர் கொண்ட கும்பல் சுற்றி திரிந்தனர்.
  • போலீசார் 4 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

கோவை,

கோவை செல்வபுரம் போலீசார் நேற்று ரோந்துபணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது பேரூர் ரோடு அன்னை வேளாங்கண்ணி ஆலயம் அருகே முக கவசம் அணிந்தபடி 5 பேர் கொண்ட கும்பல் சுற்றி திரிந்தனர்.

இதனை பார்த்து சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை பிடித்து விசாரிக்க முயன்றனர். ஆனால் அவர்கள் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயன்றனர்.

உடனடியாக போலீசார் 5 பேரில் 4 பேரை மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.

விசாரணையில், அந்த கும்பல் முன் விரோதம் மற்றும் பணத்தகராறு காரணமாக கரும்புக்கடையை சேர்ந்த அஜ்மல் கான் என்பவரை காரில் கடத்தி சென்று தாக்குதல் நடத்த திட்டமிட்டது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் வாலிபரை காரில் கடத்திச் செல்ல காத்திருந்த திருப்பூர் முருகம்பாளையத்தை சேர்ந்த டிரைவர் மனோஜ்குமார்(வயது27), திருப்பூர் பாலப்பாளையத்தை சேர்ந்த வெல்டர் விவேக்(29), திருப்பூர் தென்னம்பாளையத்தை சேர்ந்த நவீன்குமார்(28), திருப்பூர் குறிச்சி நகரை சேர்ந்த தென்பாண்டி(22) என்பது தெரியவந்தது .

பின்னர் போலீசார் 4 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். தப்பி ஓடிய சூர்யா என்பவரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News