மரக்கிளை முறிந்து விழுந்ததில் தம்பதியினர் காயம்
- 3 மீட்டர் சுற்றளவு பருமனான இந்த அரச மரத்தின் கிளைகள் மெயின்ரோடு உள்பட நாலா புறமும் படர்ந்து சாலைப் பயணிகளுக்கும் பொதுமக்களுக்கும் குளிர் நிழலும், இனிய காற்றும் வழங்கி பயனளிக்கிறது.
- இந்த மரத்திலிருந்து சாலை நோக்கி வளர்ந்த 2 பெரிய கிளைகள் திடீரென முறிந்து சாலையில் விழுந்தது.
திருவையாறு:
திருவையாறு -கல்லணை மெயின் ரோடில் கூத்தாடி மதகு எனும் இடத்தில் காவிரி பாசன வாய்க்கால் தலைமதகு உள்ளது. இதனருகில் வடகரையில் அரச மரம் உள்ளது. இந்த மரத்தினருகில் முனியாண்டவர் கோவில் உள்ளது. சுமார் 3 மீட்டர் சுற்றளவு பருமனான இந்த அரச மரத்தின் கிளைகள் மெயின்ரோடு உள்பட நாலா புறமும் படர்ந்து சாலைப் பயணிகளுக்கும் பொதுமக்களுக்கும் குளிர் நிழலும், இனிய காற்றும் வழங்கி பயனளிக்கிறது.
இந்நிலையில் நேற்று இந்த மரத்திலிருந்து சாலை நோக்கி வளர்ந்த 2 பெரிய கிளைகள் திடீரென முறிந்து சாலையில் விழுந்தது. அப்போது சமயபுரத்திலிருந்து திருவையாறு நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்த கணவன்- மனைவி மீது விழுந்ததில் 2 பேரும் பலத்த காயம் அடைந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
தகவலறிந்த திருவையாறு தீயணைப்பு துறையினர் மற்றும் மின்வாரிய துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சாலையோர மின்இணைப்புகளைத் துண்டித்து கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தினர். இதனால் திருவையாறு-கல்லணை சாலையில் 1 மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து ஸ்தம்பித்தது.