உள்ளூர் செய்திகள்

கோவையில் 2 வயது குழந்தை மர்மச்சாவு

Published On 2023-06-08 09:04 GMT   |   Update On 2023-06-08 09:04 GMT
  • குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஸ்ரீஜேஸ் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
  • அன்னூர் போலீசார் குழந்தையின் சித்தியிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோவை,

கோவை அன்னூர் அருகே உள்ள பிள்ளையப்பம் பாளையத்தை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 32). ஏ.சி. மெக்கானிக். இவருக்கு பபிதா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது.

இவர்களுக்கு ஸ்ரீகையா (4) என்ற பெண் குழந்தையும், ஸ்ரீ ஜேஸ் (2) என்ற ஆண் குழந்தையும் உள்ளது. பபிதா கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உடல் நிலை பாதிக்கப்பட்டு இறந்தார்.

பின்னர் ராஜேஷ் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த கீர்த்தனா (23) என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இவரது பராமரிப்பில் ஸ்ரீ ஜேஸ் இருந்து வந்தார். சம்பவத்தன்று குழந்தைக்கு காய்ச்சல் இருந்தது. அதற்கு கீர்த்தனா மருந்து கொடுத்து உள்ளார்.

பின்னர் ஸ்ரீஜேஸ் விளையாடி கொண்டு இருந்த போது கீழே விழுந்து இடது கை முட்டியிலும், வாயிலும் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக குழந்தைக்கு காய்ச்சல் அதிகமானது. இதனையடுத்து கீர்த்தனா குழந்தையை அன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஸ்ரீஜேஸ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்த தகவல் கிடைத்ததும் அன்னூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார் குழந்தையின் உடலை ஆய்வு செய்தனர். இடது கை மனிக்கட்டில் காயம் உள்ளது.

ஏதோ கடித்தது போல காயம் இருப்பது தெரியவந்தது. கீர்த்தனாவிடம் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். எனவே போலீசாருக்கு 2 வயது ஆண் குழந்தையின் மரணம் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

குழந்தை எப்படி இறந்தது என்பது பிரேத பரிசோதனை முடிவில் தெரிய வரும் என போலீசார் தெரிவித்து உள்ளனர். குழந்தையின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையின் சித்தியிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News