உள்ளூர் செய்திகள்

பொள்ளாச்சி அருகே 15 வயது சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய 17 வயது சிறுவன்

Published On 2023-08-13 08:45 GMT   |   Update On 2023-08-13 08:45 GMT
  • அக்கம் பக்கத்தினர் பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர்.
  • சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

கோவை,

கோவை கிணத்துக்கடவு அருகே உள்ள மெட்டுவாவியை சேர்ந்தவர் 15 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இவர் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு ஈரோட்டில் உள்ள பண்ணாரியம்மன் கோவிலுக்கு சென்றார். அப்போது மாணவிக்கு வடவேடம்பட்டியை சேர்ந்த 17 வயது சிறுவனுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. சம்பவத்தன்று சிறுமி தனது பெற்றோரிடம் பள்ளிக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். ஆனால் அவர் பள்ளிக்கு செல்லாமல் காதலனுடன் பழனிக்கு சென்றார்.

பின்னர் 2 பேரும் அங்குள்ள கோவிலில் வைத்து திருமணம் செய்தனர். பின்னர் சிறுவன் சிறுமியை அவரது வீட்டிற்கு அழைத்து சென்றார். அங்கு வைத்து 2 பேரும் கணவன்-மனைவியாக வாழ்ந்தனர். இந்த நிலையில் சிறுமி 4 மாத கர்ப்பமாக இருந்தார்.

இது குறித்து அக்கம் பக்கத்தினர் பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் சம்பவஇடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் 17 வயது சிறுவன், 15 வயது சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கியது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் போலீசார் சிறுவனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

Tags:    

Similar News