உள்ளூர் செய்திகள்

வடவள்ளியில் அ.தி.மு.க.வினர் மீது 5 பேர் கும்பல் தாக்குதல்

Published On 2022-12-12 09:10 GMT   |   Update On 2022-12-12 09:10 GMT
  • வள்ளியம்மன் கோவிலில் இன்று 6-வது ஆண்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
  • தி.மு.க பிரமுகர் பிரபாகருக்கு ஆதரவாகவும் சிலர் போலீஸ் நிலையத்தில் குவிந்தனர்.

வடவள்ளி

கோவை மருதமலை அடிவார பகுதியில் வள்ளியம்மன் கோவில் உள்ளது.

இந்த கோவிலில் இன்று 6-வது ஆண்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இந்த விழாவையொட்டி கோவில் நிர்வாகம் சார்பில் கோவில் முன்பு, பஸ் நிலைய பகுதி உள்பட சில இடங்களில் விழாவுக்கு வருபவர்களை வரவேற்று பிளக்ஸ் பேனர்கள் வைக்க முடிவு செய்தனர்.

அதன்படி ேகாவில் முன்பு பேனர் வைத்து விட்டு, மருதமலை அடிவார பஸ் நிலையத்திற்கு சென்ற அவர்கள், அங்கு பேனர் வைத்து கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு தி.மு.க. பிரமுகர் பிரபாகர் மற்றும் சிலர் வந்தனர். அவர்கள் இங்கு பேனர் வைக்க வேண்டாம் என தெரிவித்தனர். இதற்கிடையே இதுபற்றிய தகவல் அறிந்ததும், அ.தி.மு.க. பிரமுகர் திவாகர் சம்பவ இடத்திற்கு வந்து, நாங்கள் பல முறை இங்கு பேனர் வைத்துள்ளோம். இங்கு வைப்போம் என தெரிவித்ததாக தெரிகிறது. இதனால் இரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இது பற்றிய தகவல் அறிந்ததும் வடவள்ளி போலீசார் விரைந்து வந்து இருதரப்பினரையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருந்தனர். இதற்கிடையே அ.தி.மு.க. பிரமுகர் திவாகர் என்பவர் தன்னை சிலர் தாக்கி விட்டதாக கூறி ஆஸ்பத்திரியில் சேர்ந்தார்.

இந்த நிலையில் அ.தி.மு.க. பிரமுகர் தாக்கப்பட்ட தகவல் அந்த பகுதியில் வேகமாக பரவியது. இதையடுத்து ஏராளமான அ.தி.மு.க.வினர் அங்கு குவிந்தனர். இதேபோல் தி.மு.க பிரமுகர் பிரபாகருக்கு ஆதரவாகவும் சிலர் போலீஸ் நிலையத்தில் குவிந்தனர்.

இரு தரப்பிலும் ஏராளமனோர் குவிந்ததால் அங்கு பரபரப்பு நிலவியது. போலீஸ் நிலையத்திற்குள் போலீசார் திவாகரின் ஆதரவாளர்கள் மற்றும் தி.மு.க. பிரமுகரிடம் பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருந்தனர்.

அப்போது போலீஸ் நிலைய வளாகத்திற்குள் 5 பேர் கும்பல் திடீரென கட்டையுடன் நுழைந்தனர். பின்னர் அவர்கள் அங்கு நின்றிருந்த அ.தி.மு.க.வினரை சரமாரியாக தாக்கினர். இதில் சிலர் காயம் அடைந்தனர்.

இது தொடர்பாக அ.தி.மு.கவினர் வடவள்ளி போலீசில் புகார் கொடுத்தனர்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அ.தி.மு.கவினரை தாக்கியது அதே பகுதியை சேர்ந்த அம்சராஜ்(38), சபரி(24), கார்த்திகேயன்(25), பேச்சியப்பன்(27), மணிகண்டன்(26) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 5 பேரையும் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் மிகுந்த பரபரப்பு நிலவியது. நிலைமையை கட்டுப்படுத்த அங்கு 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News