சுதந்திர தினத்தன்று தொழிலாளர்களுக்கு விடுமுறை வழங்காத 465 நிறுவனங்களுக்கு அபராதம்
- 259 உணவு நிறுவனங்களில் ஆய்வு செய்ததில் 201 நிறுவனங்களில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டன.
- 21 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் ஆய்வு செய்ததில் 7 நிறுவனங்களில் குறைபாடுகள் காணப்பட்டது.
சென்னை:
சென்னை 1,2 மற்றும் 3 -ம் வட்ட தொழிலாளர் உதவி ஆணையர்கள்(அமலாக்கம்) தலைமையில் தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் சுதந்திர தின விடுமுறை நாளில் தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள்(தேசிய பண்டிகை விடுமுறை) சட்டம் 1958-ன் கீழ் சென்னை மாவட்டத்தில் உள்ள 324 கடைகள் மற்றும் நிறுவனங்களில் ஆய்வு செய்தனர். இதில் 257 கடைகளில் முரண்பாடுகள் கண்டுபிடிக்கப்பட்டது.
259 உணவு நிறுவனங்களில் ஆய்வு செய்ததில் 201 நிறுவனங்களில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டன. இதேபோல் 21 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் ஆய்வு செய்ததில் 7 நிறுவனங்களில் குறைபாடுகள் காணப்பட்டது.
இதையடுத்து மொத்தம் 465 நிறுவனங்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டது. இது தொடர்பாக சென்னை 3-ம் வட்ட தொழிலாளர் உதவி ஆணையர்(அமலாக்கம்) எஸ்.நீலகண்டன் கூறுகையில், தேசிய விடுமுறை தினத்தன்று நிறுவனங்கள் தங்கள் அலுவலகங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு விடுமுறை அளிக்கவேண்டும். அவ்வாறு விடுமுறை அளிக்காமல் பணிக்கு அமர்த்தியுள்ள தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் அல்லது மாற்று விடுப்பு வழங்க வேண்டும்.
இதுபற்றி தொழிலாளர் உதவி ஆணையர்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கவேண்டும். அவ்வாறு அளிக்காத 465 நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்றார்.