உள்ளூர் செய்திகள்

கோவையில் மின் சாதன பொருட்கள் குடோனில் திருட முயன்ற 4 பேர் கைது

Published On 2023-06-06 09:18 GMT   |   Update On 2023-06-06 09:24 GMT
  • வாலிபர்கள் குடோனில் இருந்து செம்பு பொருட்களை திருடி விட்டு வெளியே வருவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
  • அனீஸ் ரகுமான் மற்றும் மன்சூர் ரகுமான் ஆகியோர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குனியமுத்தூர்,

கோவை செல்வபுரம் பகுதியை சேர்ந்தவர் அமீர் அப்பாஸ் (வயது42). இவர் கரும்புகடை பாரதி நகரில் பழைய மின்சாதன பொருட்கள் குடோன் நடத்தி வருகிறார். இவரது குடோனில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை கரும்பு கடையை சேர்ந்த அப்பாஸ் (23) என்பவர் வேலை பார்த்தார்.

இதையடுத்து அவர் வேலையை விட்டு நின்று விட்டார். இந்நிலையில் வழக்கம்போல காலையில் குடோனை திறப்பதற்கு அமீர்அப்பாஸ் சென்றார். பின்னர் குடோனை திறந்து விட்டு அருகில் உள்ள கடைக்கு சென்றார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 4 வாலிபர்கள் குடோன் திறந்து இருப்பதை கண்டு உள்ளே புகுந்தனர். பின்னர் உள்ளே இருந்த 5 கிலோ செம்பு பொருட்களை திருடி விட்டு வெளியே வந்தனர். சிறிது நேரத்தில் வெளியே சென்று விட்டு வந்த அமீர்அப்பாஸ், அந்த வாலிபர்கள் குடோனில் இருந்து செம்பு பொருட்களை திருடி விட்டு வெளியே வருவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் 4 வாலிபர்களையும் மடக்கி பிடித்து கரும்புகடை போலீசில் ஒப்படைத்தனர்.

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் ஏற்கனவே இவரது குடோனில் வேலை பார்த்த அப்பாஸ் (23) என்பவர், அவரது நண்பர்களான அனீஸ் ரகுமான் (22), மன்சூர் ரகுமான் (24), தவூபிக் (17) ஆகியோர் உதவியுடன் மோட்டார் சைக்கிளில் சென்று குடோனில் இருந்த பொருட்களை திருட முயன்றதை ஒப்புக் கொண்டனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர். இதில் அனீஸ் ரகுமான் மற்றும் மன்சூர் ரகுமான் ஆகியோர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News