உள்ளூர் செய்திகள்
தி.மு.க. அரசை பற்றி எதிர்காலத்தில் அண்ணாமலை வாழ்த்துவார்- அமைச்சர் பேட்டி
தி.மு.க. அரசை பற்றி எதிர்காலத்தில் அண்ணாமலை வாழ்த்துவார் அமைச்சர் பெரியகருப்பன் பேட்டியில் கூறியுள்ளார்.
சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஒன்றியம் முறையூர் ஊராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் கலைஞரின் வரும் முன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கினார். அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ஆகியோர் குத்துவிளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்தனர். பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.
இதில் தமிழரசி எம்.எல்.ஏ. பேசுகையில், பெண் பிள்ளைகளை பெற்றெடுப்பதில் நீங்கள் தயக்கம் காட்டினால் என்றால் ஆண்-பெண் விகிதாச்சாரம் என்பது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். அந்த மாற்றம் பெண் பிள்ளைகள் இல்லை என்று சொன்னால் ஆண்கள் திருமணம் முடிக்கும் போது பெண்களே இருக்கமாட்டார்கள். ஆகையால் பெண் பிள்ளை களை பெற்றெடுப்பதில் தயக்கம் காட்டவேண்டாம் என்றார்.
பின்னர் அமைச்சர் பெரியகருப்பன் நிருபர்களிடம் கூறுகையில், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பாராட்ட வேண்டும் என்பதற்காக முதலமைச்சரோ, அமைச்சர்களோ செயல்பட தேவையில்லை. மக்களுடைய தேவைகளை உணர்ந்து அந்த தேவைகளை பூர்த்தி செய்து அதன் மூலம் மக்கள் பாராட்டினால் அதுதான் நல்ல அரசுக்கு அடையாளம். இப்படிப்பட்ட நல்ல அரசை பற்றி எதிர்காலத்தில் அண்ணாமலையே வாழ்த்துவதற்கான வாய்ப்புகளும் இருக்கலாம் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட சுகாதாரத்துறை இணைஇயக்குநா் ராம் பிரகாஷ், குடும்ப நலத்துறை இணை இயக்குனர் முருகேஸ்வரி, பிரான்மலை ஆரம்ப சுகாதார மைய வட்டார மருத்துவ அதிகாரி நபீஸா பானு, முறையூர் ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ், சிங்கம்புணரி ஒன்றியச்செயலாளர் பூமிநாதன், சிவபுரி சேகர், சிங்கம்புணரி பேரூராட்சி தலைவர் அம்பலமுத்து, மருத்துவர்கள் பரணிதரன், ராஜ்குமார், மற்றும் வட்டாட்சியர் கயல்செல்வி, வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.