உள்ளூர் செய்திகள்
சிறுமிக்கு பாலியல் தொல்லை: மதபோதகர் ஜெயிலில் அடைப்பு
நீலகிரியில் சிறுமிக்கு மதபோதகர் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள பிங்கர் போஸ்ட் பகுதியை சேர்ந்தவர் சூரியமூர்த்தி என்ற சூரி ஸ்டீபன்(வயது34). மதபோதகரான இவர் அந்த பகுதியில் ஜெபக்கூடம் நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி யும் 2 மகள்களும் உள்ளனர்.
இந்த நிலையில் சூரி ஸ்டீபன் தனது வீட்டுக்கு அருகில் உள்ள மற்றொரு பகுதிக்கு சென்றார். அங்கு ஒரு வீட்டில் 13 வயது சிறுமி தனியாக இருந்தாள். இதனை அறிந்து கொண்ட சூரி ஸ்டீபன் சிறுமியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தார்.
பின்னர் சிறுமியின் அருகே சென்று அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதனால் அதிர்ச்சியான சிறுமி சத்தம் போட்டார். பயந்துபோன அவர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். சிறுமியின் தாய் மாலையில் வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது சிறுமி தனக்கு நடந்த சம்பவத்தை தாயிடம் தெரிவித்தார்.
இதையடுத்து சிறுமியின் தாய், அவரை அழைத்து கொண்டு ஊட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் சூரி ஸ்டீபன் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. உடனடியாக போலீசார் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.பின்னர் அவரை ஊட்டி கோர்ட்டில் நீதிபதி ஸ்ரீதரன் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.
அவரை 2 வாரம் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் அவரை பாதுகாப்புடன் அழைத்து சென்று குன்னூர் கிளை சிறையில் அடைத்தனர்.