உள்ளூர் செய்திகள்
கோத்தகிரி அருகே பாலீஸ் போடுவதாக ஏமாற்றி 5 பவுன் நகை அபேஸ்
பாலீஸ் போடுவதாக கூறி நகையை அபேஸ் செய்த நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
ஊட்டி:
கோத்தகிரி கக்குச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மனைவி நளினி (37)இவர் தனது வீட்டில் நேற்று வேலை செய்து கொண்டிருந்தார். மதியம் 12 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் நகைகளை பாலீஷ் செய்து தருவதாக நளினியிடம் கூறினர்.
நளினியும் அதனை நம்பி முதலில் மோதிரத்தை மட்டும் பாலீஷ் செய்ய கொடுத்தார். அதனை பாலீஷ் செய்து காண்பித்துவிட்டு, வேறு நகை இருந்தால் கொடுங்கள், அவற்றையும் பாலீஷ் செய்து தருகிறோம் என அவர்கள் கேட்டனர்.
இதைத்தொடர்ந்து மூன்றே கால் பவுன் செயின், இரண்டே கால் பவுன் தங்கத் தாலியையும் அவர்களிடம் பாலீஷ் போட கொடுத்தார்.
அப்போது, அவர்கள் சுடுநீர் கேட்டதையடுத்து, நளினி வீட்டுக்குள் சென்று சுடுநீர் கொண்டுவந்து வெளியில் பார்க்கும்போது பாலீஷ் செய்ய வந்த 2 பேரும் நகைகளுடன் தப்பிச் சென்றனர்.
இதைத்தொடர்ந்து, நளினி அளித்த புகாரின்பேரில் கோத்தகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் வழக்குப்பதிந்து குற்றவாளிகளை தேடி வருகிறார்கள்.
மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள கிராமத்தில் பகல் நேரத்தில் பாலீஷ் போடுவதாக நகைகளை ஏமாற்றி பறித்துச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.