உள்ளூர் செய்திகள்
ஆய்வு கூட்டம்

நீலகிரியில் வீட்டு தனிமையில் உள்ளவர்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். மாவட்ட கண்காணிப்பு அதிகாரி அறிவுறுத்தல்

Published On 2022-01-18 08:31 GMT   |   Update On 2022-01-18 08:31 GMT
முககவசம் அணிவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்
ஊட்டி:

நீலகிரி மாவட்டத்தில் வீட்டு தனிமையில் உள்ளவர்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு கண்காணிப்பு அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பரவல் தடுப்பு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம், குன்னூர் இன்கோசர்வ் அலுவலகத்தில் நடைபெற்றது. கலெக்டர் அம்ரித் முன்னிலை வகித்தார்.

சுற்றுப்புறச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வன செயலாளரும், மாவட்ட கண்காணிப்பு அதிகாரியுமான சுப்ரியா சாஹு தலைமை தாங்கி பேசியபோது கூறியதாவது: நீலகிரி மாவட்டத்தில் கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், ஜிங்க் மற்றும் வைட்டமின் மாத்திரைகளை வழங்க வேண்டும். 

வார்ரூம் மூலம் கண்காணிக்க தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். லேசான அறிகுறிகளுடன் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டவர்களின் உடல்நலம் குறித்து வார்ரூம், மூலம் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

பொதுமக்கள் முககவசம் அணியும் பழக்கத்தை கடைபிடிக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். முககவசம் அணியாமல் வெளியே வரும் நபர்களுக்கு உடனடியாக அபராதம் விதிக்க வேண்டும். தகுதி வாய்ந்த அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க வேண்டும். 

அரசு அறிவித்த நிலை யான வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக கடைபிடிக்கிறார்களா? என்று தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். விதிமுறைகளை பின்பற்றாத வணிக நிறுவனங்களுக்கு உடனடியாக அபராதம் விதிக்க வேண்டும். 

இவ்வாறு அவர் கூறினார். 

கூட்டத்தில்  மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, குன்னூர் சப்&கலெக்டர் தீபனா விஷ்வேஸ்வரி, சுகாதார பணிகள் துணை இயக்குநர் பாலுசாமி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News