உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

கூடலூர் அரசு கலைக்கல்லூரியில் 241 படுக்கை வசதியுடன் கொரோனா சிகிச்சை மையம்

Published On 2022-01-09 13:27 IST   |   Update On 2022-01-09 13:27:00 IST
கூடலூர் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தை கலெக்டர் அம்ரித் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஊட்டி:

கொரோனா, ஒமைக்ரான் தொற்று அதிக அளவில் பரவி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூடலூர் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் 241 படுக்கை வசதிகளுடன் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. 
 
இந்த மையத்தை கலெக்டர் அம்ரித் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  அடிப்படை வசதிகளான குடிநீர், கழிப்பிட வசதிகள் உள்ளதா?  என்பதை கேட்டறிந்து, அனைத்து வசதிகளும் ஏற்படுத்தி தயார்நிலையில் வைத்திருக்குமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் அறிவுறுத்தினார். 

முன்னதாக கூடலூர் துப்புக்குட்டிபேட்டை ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி, வண்டிப்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, தெப்பக்காடு வரவேற்பு நிலையம், மசினகுடி பஸ்நிலையம் ஆகிய இடங்களில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை கலெக்டர் அம்ரித் பார்வையிட்டார்.

அப்போது கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வந்த பொதுமக்களிடம் முதல் தவணை, இரண்டாம் தவணை செலுத்தப்பட்டுள்ளதா?  என கேட்டறிந்தார்.  

தற்போது கொரோனா தொற்று அதிக அளவில் பரவி வருவதால், வீட்டின் அருகில் உள்ளவர்கள் மற்றும் உறவினர்கள் எவருக்கேனும் தடுப்பூசி செலுத்தப்படாமல் இருந்தால் அவர்களிடம், இதுபோன்று வீடுகளுக்கு அருகிலேயே நடத்தப்படும் சிறப்பு முகாம்களை பயன்படுத்தி தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார். 

நீலகிரி மாவட்டத்தின் எல்லையோர சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும் என சுகாதாரத் துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

Similar News