உள்ளூர் செய்திகள்
இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் அம்ரித் வெளியிட்ட காட்சி.

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு- நீலகிரியில் 5 லட்சத்து 87ஆயிரம் வாக்காளர்கள்

Published On 2022-01-06 14:45 IST   |   Update On 2022-01-06 14:45:00 IST
நீலகிரி மாவட்டத்தில் 5 லட்சத்து 87 ஆயிரத்து 686 மொத்த வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்களை விட பெண் வாக்காளர்களே அதிகம்.
ஊட்டி:

நீலகிரி மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் அம்ரித் இறுதி வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார். இதுகுறித்து கலெக்டர் அம்ரித் கூறியதாவது:-

ஊட்டி சட்டசபை தொகுதியில் 98,135 ஆண் வாக்காளர்கள், 1,07,283 பெண் வாக்காளர்கள் 6 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 2,05,424 வாக்காளர்கள் உள்ளனர். கூடலூர்(தனி) சட்டசபை தொகுதியில் 92,955 ஆண் வாக்காளர்கள், 97,914 பெண் வாக்காளர்கள் 2 மூன்றாம் பாலினத்தவர்கள் என 1,90,871 வாக்காளர்களும், குன்னூர் தொகுதியில் 91,065 ஆண் வாக்காளர்கள், 1,00,323 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர் 3 பேர் என மொத்தம் 1,91,391 வாக்காளர்கள் உள்ளனர்.

நீலகிரியில் ஊட்டி, கூடலூர், குன்னூர் உள்ளிட்ட 3 தொகுதிகளில் 2,82,155 ஆண் வாக்காளர்களும், 3,05,520 பெண் வாக்காளர்களும், மற்றவர்கள் 11 பேர் என  மொத்தம் 5,87,686 வாக்காளர்கள் உள்ளனர்.  ஆண்களை விட பெண்கள் 23,365 பேர் அதிகமாக வாக்காளர் பட்டியலில் இடம் பெற்று இருக்கின்றனர். கடந்த நவம்பர் 1-ந் தேதி முதல் ஒரு மாதம் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் நடந்தது. இதில் விண்ண ப்பங்கள் பெறப் பட்டு பரிசீலனை  மூலம் பட்டியலில் சேர்க்கப் பட்டன. 2,147 பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். 8,026 பேர் புதிதாக சேர்க்கப்பட்டனர்.


கடந்த நவம்பர் மாதம் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலை ஒப்பிடும்போது, கூடுதலாக 5,879 வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர். இதில் 18 வயது பூர்த்தி  அடைந்த புதிய வாக்காளர்கள் அதிகம் பேர் இடம் பெற்றனர். ஊட்டி தொகுதியில் 239 வாக்குச்சாவடிகள், குன்னூர் தொகுதியில் 225 வாக்குச்சாவடிகள், கூடலூர் தொகுதியில் 222 வாக்குச் சாவடிகள்என மொத்தம் 686 வாக்குச் சாவடிகள்  உள்ளன. இவ்வாறு அவர் கூறினர்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) தனபிரியா, வருவாய் கோட்டாட்சியர்கள் துரைசாமி (ஊட்டி), சரவண கண்ணன்(கூடலூர்), தேர்தல் தனி தாசில்தார் புஷ்பாதேவி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News