செய்திகள்
கோப்புபடம்

சாலைமறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 100 பேர் கைது

Published On 2020-12-03 14:02 GMT   |   Update On 2020-12-03 14:02 GMT
வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே சாலைமறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 100 பேரை போலீசார் கைது செய்தனர்.
வேலூர்:

வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காலை சாலைமறியல் செய்யப்போவதாக அறிவித்திருந்தனர். அதன்படி நேற்று ஏராளமான போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த நிலையில் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் அங்கு வந்து, திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதற்கு மாவட்ட தலைவர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். இதில், பொருளாளர் வீரபாண்டியன், துணை தலைவர் சங்கரி, துணை செயலாளர் ஆறுமுகம் உள்பட சுமார் 100 பேர் கலந்து கொண்டனர்.

அப்போது அவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும். கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். தனியார் துறை பணிகளில் 5 சதவீத வேலைவாய்ப்பு இடங்களை உத்தரவாதப்படுத்த வேண்டும். அரசு துறையில் உள்ள பின்னடைவு காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்து வெள்ளை அறிக்கையை அரசு வெளியிட்டு பணியிடங்களை நிரப்ப வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News