செய்திகள்
கோப்பு படம்.

சத்துவாச்சாரியில் வீட்டின் பூட்டை உடைத்து பணம், வெள்ளிப்பொருட்கள் திருட்டு

Published On 2020-11-30 10:40 GMT   |   Update On 2020-11-30 10:40 GMT
வேலூர் சத்துவாச்சாரியில் வீட்டின் பூட்டை உடைத்து பணம், வெள்ளிப்பொருட்களை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
வேலூர்:

வேலூர் சத்துவாச்சாரி பேஸ்-1 முதலாவது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ஜனார்த்தனன். இவருடைய மனைவி வரதாள் (வயது 66). இவர்களின் மகன், மகள் சேலத்தில் வசித்து வருகிறார்கள். ஜனார்த்தனன் சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்து விட்டார். வரதாள் தனது மாமியாருடன் வசித்து வருகிறார். கடந்த 23-ந் தேதி வரதாள் வீட்டை பூட்டி விட்டு மாமியாருடன் சேலத்தில் வசிக்கும் மகள் வீட்டிற்கு சென்றார். இருவரும் கடந்த 27-ந் தேதி இரவு வீடு திரும்பினர். வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. அதனால் அதிர்ச்சி அடைந்த 2 பேரும் வீட்டின் உள்ளே சென்று பார்த்தனர். அங்கு பீரோ உடைக்கப்பட்டு, அதில் வைத்திருந்த ரூ.10 ஆயிரம் மற்றும் 500 கிராம் வெள்ளிப் பொருட்கள் திருட்டு போயிருந்தது. வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் பூட்டை உடைத்து பணம், வெள்ளிப்பொருட்களை திருடி சென்றிருப்பது வரதாளுக்கு தெரிய வந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த சத்துவாச்சாரி இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) செந்தில்குமார் தலைமையிலான போலீசார் அங்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் வரதாள் மற்றும் அக்கம், பக்கத்தில் உள்ள வீடுகளில் வசிப்பவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் அந்த வீட்டில் பதிவாகியிருந்த மர்மநபர்களின் கைரேகைகள் பதிவு செய்யப்பட்டது. அந்த பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் மர்மநபர்களின் உருவம் பதிவாகி உள்ளதா? என்று போலீசார் ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். வீட்டின் பூட்டை உடைத்து பணம், வெள்ளிப்பொருட்களை திருடிய மர்மநபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். இந்த திருட்டு சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News