திருமருகல் அருகே ரேஷன் பொருட்கள் வழங்குவதில் காலதாமதம்- பொதுமக்கள் சாலை மறியல்
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கட்டுமாவடி ஊராட்சி நடுக்கடையில் உள்ள கூட்டுறவு கிராம அங்காடியில் ரேஷன் பொருட்கள் வழங்குவதில் கால தாமதம் ஏற்படுவதாக கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தமிழக அரசு பயோமெட்ரிக் முறையில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வழங்குவதாக அறிவித்தது ஆனால் பயோமெட்ரிக் முறையில் ரேஷன் அட்டைதாரர்களின் கைவிரல் ரேகை பதிவதில் காலதாமதம் ஏற்படுவதாக கூறி பொதுமக்கள் கடந்த 10 தினங்களாக ரேஷன் கடைக்கு சென்று திரும்பி வருகின்றனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திடீரென நாகை நன்னிலம் சாலையில் கூட்டுறவு அங்காடியை கண்டித்து மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த நாகை வட்ட வழங்கல் அலுவலர் பசுபதி கிராம நிர்வாக அலுவலர்கள் சதீஷ், சத்யதாஸ் ஆகியோர் சென்று பொதுமக்களிடம் பழைய முறையில் ரேஷன் பொருட்கள் வழங்குவதாக கூறியதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
இந்த போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் ஜெயபால், கட்டுமாவடி ஊராட்சி மன்ற தலைவர் சரவணன் விவசாய சங்க ஒன்றிய தலைவர் ஸ்டாலின் பாபு, செயலாளர் பொன்மணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.