செய்திகள்
சீர்காழி புதிய பஸ் நிலைய வளாகம் முழுவதும் போலீஸ் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.

சீர்காழி மீனவ கிராமத்தில் பதற்றம் - போலீசார் குவிப்பு

Published On 2020-07-16 13:22 GMT   |   Update On 2020-07-16 13:22 GMT
சீர்காழி மீனவர் கிராமத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சீர்காழி:

சீர்காழி தாலுகாவிற்கு உட்பட்ட பழையாறு, மடவாமேடு, திருமுல்லைவாசல், பூம்புகார் உள்ளிட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த ஒரு மீனவ பிரிவினர் அரசு தடைசெய்யப்பட்ட சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடித்து வருகின்றனர். இதற்கு சிறு தொழில் மீனவர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாக நடுக்கடலில் இருதரப்பு மீனவர்களுக்கு இடையே அடிக்கடி மோதல் ஏற்படுகிறது. இதையடுத்து பல்வேறு மீனவ கிராமங்களில் சுருக்குமடி வலைக்கு ஆதரவாகவும், எதிராகவும் மீனவர்கள் கடந்த 11-ந் தேதி முதல் உண்ணாவிரத போராட்டம், வேலைநிறுத்த போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்றுமுன்தினம் சுருக்குமடிவலைக்கு ஆதரவாக 21 மீனவ கிராம கூட்டம் நடைபெற்றது. இந்தநிலையில் நாகை மாவட்ட கலெக்டர் பிரவீன்நாயர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் சுருக்குமடி வலையை பயன்படுத்த அரசு எதிர்ப்பு தெரிவித்தால் வருகிற 17-ந் தேதி அந்தந்த மீனவ கிராமங்களில் கடலில் இறங்கி தற்கொலை செய்து கொள்ளபோவதாக போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 11-ந் தேதி முதல் சுருக்குமடி வலையை பயன்படுத்தும் மீனவர்களுக்கு ஆதரவாக கடலுக்கு செல்லாமல் மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை கரையில் நிறுத்தி வைத்து படகில் கருப்புக்கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாக மீனவ கிராமங்களில் பதற்றம் நிலவி வருகிறது. இதனால் சீர்காழி பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு பணிக்காக போலீசார் தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களை நிறுத்தி வைத்துள்ளனர்.
Tags:    

Similar News