செய்திகள்
கோப்புபடம்

புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை - வரதட்சணை கொடுமையா? உதவி கலெக்டர் விசாரணை

Published On 2020-07-15 18:39 IST   |   Update On 2020-07-15 18:39:00 IST
நாகூர் அருகே புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வரதட்சணை கொடுமையா? என்பது குறித்து உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
நாகூர்:

நாகை மாவட்டம், நாகூரை அடுத்த திருக்கண்ணபுரம் பெருநாட்டான் தோப்பு தெற்கு தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் சிற்ப வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சவுமியா(வயது 20). இவருக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக சவுமியா வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 11-ந்தேதி வயிற்றுவலி அதிகமானதால் மனமுடைந்த சவுமியா வீட்டின் அருகில் உள்ள தோப்பில் தூக்குப்போட்டு கொண்டார்.

இதனை பார்த்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு நாகை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் சவுமியா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

சவுமியாவுக்கு திருமணமாகி 5 மாதங்களே ஆவதால் வரதட்சணை கொடுமையா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து நாகை உதவி கலெக்டர் பழனிகுமார் விசாரணை நடத்தி வருகிறார். புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தபகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News