செய்திகள்
கோப்பு படம்

கல்பாக்கம் அருகே, பெண்ணின் மரணத்தில் சந்தேகம் - ஆஸ்பத்திரி முற்றுகை

Published On 2019-11-16 15:44 GMT   |   Update On 2019-11-16 15:44 GMT
கல்பாக்கம் அருகே பெண்ணின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர்கள் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டனர்.
கல்பாக்கம்:

கல்பாக்கத்தை அடுத்த கடலூர் கிராமத்தை சேர்ந்தவர் நந்தினி என்ற சத்தியவாணி (வயது 25). இவருக்கும், கல்பாக்கம் அடுத்த நத்தமேடு கிராமத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் பாளையம் என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன் திருமணம் நடந்துள்ளது.

இந்நிலையில் நேற்று மாலை நந்தினிக்கு உடல்நிலை சரியில்லை என்று அவரது கணவர் பாளையம் சதுரங்கப்பட்டினம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அங்கு நந்தினியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.

இதனையடுத்து நந்தினியின் உடல் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த நிலையில் நந்தினியின் கழுத்தில் காயம் இருந்ததாகவும் அவரது சாவில் மர்மம் உள்ளதாகவும் நந்தினியின் உறவினர்கள் சதுரங்கப்பட்டினம் அரசு ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டனர்,

தகவலறிந்த மாமல்லபுரம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவரதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முற்றுகையில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்துச் சென்றனர். இது குறித்து ஆர்.டி.ஓ. விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News