செய்திகள்
தற்கொலை செய்த கிருஷ்ண பிரியா.

செங்கல்பட்டு அருகே கல்லூரி மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை

Published On 2019-11-14 09:54 GMT   |   Update On 2019-11-14 09:54 GMT
செங்கல்பட்டு அருகே கல்லூரி மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செங்கல்பட்டு:

செங்கல்பட்டு அருகே உள்ள வெண்பாக்கத்தில் வித்யாசாகர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இங்கு விழுப்புரம் மாவட்டம் மலையம்பட்டி கிராமத்தை சேர்ந்த பலராமன் என்பவரது மகள் கிருஷ்ண பிரியா (வயது 19) இயற்பியல் 3-ம் ஆண்டு படித்து வந்தார். அவர் கல்பாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி தினமும் கல்லூரிக்கு சென்று வந்தார்.

கல்லூரியில் தற்போது செமஸ்டர் தேர்வு நடந்து வருகிறது. மாணவி கிருஷ்ண பிரியா நேற்று காலை கடைசி தேர்வை எழுதினார்.

பின்னர் மாலையில் வகைப்பு அறையில் இருந்து வெளியே வந்த அவர் திடீரென கல்லூரியின் 2-வது மாடிக்கு சென்றார். உடன் வந்த தோழிகள் கேட்டபோது எதுவும் கூறவில்லை.

இந்த நிலையில் திடீரென அவர் கல்லூரியின் 2-வது மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில் கிருஷ்ண பிரியாவின் தலை மற்றும் உடலில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார். இதனை கண்டு மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக கிருஷ்ண பிரியாவை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

நேற்று இரவு கிருஷ்ண பிரியா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். அவரது தற்கொலை முடிவுக்கான காரணம் என்ன என்று தெரியவில்லை.

கிருஷ்ண பிரியாவுக்கு கல்லூரியில் ஏதேனும் பிரச்சினை இருந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் செங்கல்பட்டு தாலுக்கா போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இது தொடர்பாக கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் கிருஷ்ண பிரியாவின் தோழிகளிடம் விசாரணை நடத்தவும் திட்டமிட்டு உள்ளனர்.

கல்லூரி மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை செய்த சம்பவம் பெரும் பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News