செய்திகள்
கண்காணிப்பு கேமரா

மாமல்லபுரம்- கோவளம் இடையே 250 கண்காணிப்பு கேமராக்கள் போலீசார் நடவடிக்கை

Published On 2019-11-13 18:22 GMT   |   Update On 2019-11-13 18:22 GMT
குற்றச்செயல்களை கண்காணிக்கும் வகையில் மாமல்லபுரம்- கோவளம் இடையே 250 கண்காணிப்பு கேமராக்கள் போலீசார் நடவடிக்கை.
மாமல்லபுரம்:

காஞ்சீபுரம் மாவட்டம் மாமல்லபுரம் முதல் சென்னை வரை உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் அடிக்கடி பல்வேறு குற்றச்செயல்கள் நடக்கின்றன. குறிப்பாக சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் அங்கிருந்து தப்பித்து கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பண்ணை வீடுகள், விடுதிகளில் தஞ்சம் அடைந்து விடுகின்றனர். மேலும் சென்னையில் கொலை சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் கொலை செய்யப்பட்டவர்களின் உடலை இ.சி.ஆர். சாலையில் உள்ள சவுக்கு தோப்புகளில் போட்டு விட்டு செல்கின்றனர். இ.சி.ஆர். சாலையில் வரும் காதல் ஜோடிகளை மிரட்டி வழிப்பறி செய்வது, காதலனை அடித்து விரட்டி விட்டு இளம்பெண்ணிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபடும் சம்பவங்களும் அடிக்கடி நடக்கின்றன.


இந்த நிலையில் கிழக்கு கடற்கரை சாலையில் தஞ்சம் அடையும் குற்றவாளிகளை அடையாளம் காணும் வகையிலும் முதல் கட்டமாக மாமல்லபுரம் முதல் கோவளம் வரை உள்ள இ.சி.ஆர். சாலையில் சாலையின் நடுவில் உள்ள தடுப்புச்சுவரில் 20 அடிக்கு ஒரு கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

இதில் பதிவாகும் காட்சிகளை கண்காணிக்கும் வகையில் கணினியுடன் கூடிய கட்டுப்பாட்டு அறையும் மாமல்லபுரம் போலீஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளது. பதிவாகும் காட்சிகளை 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் போலீசார் பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.

தற்போது 200 கண்காணிப்பு கேமராக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. மீதமுள்ள 50 கண்காணிப்பு கேமராக்கள் இணைப்பு இன்னும் ஒரு சில தினங்களில் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட உள்ளது.
Tags:    

Similar News