புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 3 பேர் கைது- இலங்கை கடற்படை நடவடிக்கை
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் பகுதியிலிருந்து 223 விசைப்படகுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இதில் கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த பஷீர் ரகுமான் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் சென்ற அதே ஊரை சேர்ந்த சிவகுமார் (வயது 25), வீரமணி (43), முருகன் (28) ஆகியோர் இந்திய எல்லையான நெடுந்தீவு அருகே 32 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் 3 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்தனர். அவர்களது விசைப்படகை கயிறு மூலம் கட்டி இலங்கைக்கு இழுத்து சென்றனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கேசன் ராணுவ முகாமில் வைத்து இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் 3 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மீனவர்களிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.