நாட்டறம்பள்ளி அருகே பள்ளி பேருந்து - அரசு பஸ் மோதல்- மாணவர்கள் உயிர் தப்பினர்
நாட்டறம்பள்ளி:
வெலக்கல் நத்தத்தையொட்டி கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் நாட்டறம் பள்ளி அருகேயுள்ள கிராமப்புற மாணவர்கள் படித்து வருகின்றனர். இன்று காலை வெள்ள நாயக்கனேரி மற்றும் சுற்றுபுற கிராமங்களில் இருந்து பள்ளி பஸ்சில் மாணவர்களை ஏற்றி வந்தனர். அப்போது நாட்டறம்பள்ளியில் இருந்து பர்கூர் நோக்கி சென்ற அரசு டவுன் பஸ்சும், பள்ளி பஸ்சும் சொரக்காய் நத்தம் என்ற இடத்தில் நேருக்கு நேர் மோதி கொண்டன.
இந்த விபத்தில் 2 பஸ்சின் முன்பகுதியில் சேதம் அடைந்தது. ஆனால் பஸ் பயணிகளுக்கோ, பள்ளி மாணவர்களுக்கோ எவ்வித காயமும் ஏற்படவில்லை.
இதையடுத்து மாற்று பஸ் கொண்டு வரப்பட்டு மாணவர்களை பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த திம்மாம்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். விபத்து குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.