செய்திகள்
தற்கொலை முயற்சி.

விபத்தில் கணவன் இறந்ததால் குழந்தைகளுடன் தற்கொலைக்கு முயன்ற பெண்

Published On 2019-10-15 12:54 GMT   |   Update On 2019-10-15 12:54 GMT
அறந்தாங்கி அருகே விபத்தில் கணவன் இறந்ததால் மனமுடைந்த பெண், குழந்தைகளுடன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அறந்தாங்கி:

அறந்தாங்கியை அடுத்த நாகுடியைச் சேர்ந்தவர் அசோகன். இவரது மனைவி தேவிபாலா. இவர்களுக்கு யுகேஷ், யுதர்சனா என்ற 2 குழந்தைகள் உள்ளனர். டீ மாஸ்டரான அசோகன் சில மாதங்களுக்கு முன்பு வெட்டிவயல் என்ற இடத்தில் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது, விபத்து ஏற்பட்டு, உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து நாகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த நிலையில் கணவர் அசோகன் வருமானத்தை மட்டுமே நம்பி இருந்த தேவிபாலா குடும்பத்தினர், அசோகன் மரணத்திற்கு பிறகு குடும்பத்தை நடத்தவே சிரமப்பட்டு வந்தனர். இந்த நிலையில் தனது வாழ்வாதாரத்தை எண்ணி வருந்திய தேவிபாலா, கணவன் உயிரிழந்த வழக்கில் தொடர்புடைய வாகனம் குறித்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காததால், மனமுடைந்தார்.

இந்த நிலையில் வாழ்வாதாரத்தை இழந்த தேவிபாலா, மனம் உடைந்து தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்றார்.

உடனே அவரது உறவினர்கள் தேவிபாலா, அவரது குழந்தைகள் யுகேஷ், யுதர்சனா ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து நாகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News