செய்திகள்
லாரிகள் வேலைநிறுத்தம்

மதுரையில் 7,500 லாரிகள் ஓடவில்லை - சரக்கு வர்த்தகம் பாதிப்பு

Published On 2019-09-19 10:17 GMT   |   Update On 2019-09-19 10:17 GMT
மதுரையில் இன்று 7,500 லாரிகள் ஓடாததால், சரக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டது.
மதுரை:

திருத்தப்பட்ட புதிய மோட்டார் வாகன சட்டத்தில் வாகனம் ஓட்டுதல் நடவடிக்கைக்கு அபராத கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டது. சாலை விதி மீறல்களுக்கான அபராத தொகையும் 10 மடங்கு அதிகரிக்கப்பட்டது.

இதை குறைக்க வலியுறுத்தி அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் இன்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இதனால் இன்று காலை 6 மணி முதல் நாடு முழுவதும் லாரிகள் ஸ்டிரைக் நடைபெற்று வருகிறது.

இந்த போராட்டம் மதுரையிலும் எதிரொலித்துள்ளது. மதுரையில் உள்ள 7500 லாரிகள் இன்று இயக்கப்படவில்லை. காலை 8 மணிவரையும், பகல் 11 மணி முதல், மதியம் 3 மணி வரையும் லாரிகள் வழக்கமாக சரக்குகள் ஏற்றி இறக்கும் பணி செய்வது வழக்கம். ஆனால் இன்று ஸ்டிரைக் காரணமாக அனைத்து லாரிகளும் கீழவாசல், மணலூர், கோச்சடை நிறுத்தங்களில் நிறுத்தப்பட்டு இருந்தன.

இதுகுறித்து லாரி உரிமையாளர் சங்க நிர்வாகிகள் கூறுகையில், திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தை திரும்ப பெற மத்திய அரசை வலியுறுத்தி இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம். எங்களது கோரிக்கை ஏற்கப்படாவிட்டால், காலவரையற்ற போராட்டம் நடத்துவது குறித்து அகில இந்திய நிர்வாகிகளுடன் பேசி முடிவெடுக்கப்படும் என்றனர்.

Tags:    

Similar News