செய்திகள்

தாராபுரத்தில் போலீஸ்காரருக்கு கொலை மிரட்டல் - பா.ம.க.வினர் 2 பேர் சிறையில் அடைப்பு

Published On 2019-04-22 14:31 GMT   |   Update On 2019-04-22 14:31 GMT
தாராபுரத்தில் போலீஸ்காரருக்கு கொலை மிரட்டல் விடுத்த பா.ம.க.வினர் 2 பேர் மீது 3 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
தாராபுரம்:

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக உள்ளவர் சந்திரசேகரன் (வயது 31). இவர் சம்பவத்தன்று இரவு அலங்கியம் சந்திப்பில் திறந்திருந்த கடைகளை மூடும்படி கூறி வந்தார்.

அப்போது அங்கு தேர்தல் வாக்குசேகரிப்பு முடிந்த நிலையில் அங்கு நின்ற தாராபுரம் பா.ம.க. நகர செயலாளர் ஜெயேந்திரன் (27), அலங்கியம் ரோடு எல்.ஜி.ஜி.எஸ். காலனியை சேர்ந்த ராம்குமார் (26) உள்ளிட்ட கட்சியினர் 6 பேர் இருந்தனர்.

அங்கு சென்ற போலீஸ்காரர் அவர்களை கலைந்து செல்லும்படி கூறினார். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஜெயேந்திரன், ராம்குமார் ஆகியோர் பாட்டிலை உடைத்து போலீஸ்காரரை கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக கூறப்படுகிறது.

இது குறித்து போலீஸ்காரர் சந்திரசேகரன் உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் பா.ம.க.வை சேர்ந்த ஜெயேந்திரன், ராம்குமார் ஆகியோர் மீது அரசு பணியை தடுத்தல், ஆபாச வார்த்தை பேசுதல், கொலைமிரட்டல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பா.ம.க.வினர் கோவை சிறையில் அடைக்கப்பட்டனர்.
Tags:    

Similar News