செய்திகள்

நாமக்கல் அருகே காதல் ஜோடி ஆசிட் குடித்து தற்கொலை முயற்சி

Published On 2019-03-26 10:56 GMT   |   Update On 2019-03-26 10:56 GMT
நாமக்கல் அருகே காதல் ஜோடி ஆசிட் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் கல்லூரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல்:

தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் சுனில்குமார் (வயது 18). இவர் நாமக்கல் மாவட்டம் திருச்சி சாலையில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் இ.இ.இ. பட்டப்படிப்பு படித்து வருகிறார்.

இவருக்கும், அதே கல்லூரியில் படித்து வரும் திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியை சேர்ந்த மாணவி தர்ஷினி (18) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

இதையடுத்து இருவரும் அடிக்கடி நேரில் சந்தித்து பேசி பழகி வந்தனர். பின்னர் இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

இந்த காதல் விவகாரம் தர்ஷினியின் பெற்றோருக்கு தெரியவரவே மகளை அழைத்து கேட்டபோது, நான், என்னுடன் கல்லூரியில் படித்து வரும் சுனில்குமார் என்பவரை காதலிக்கிறேன், நாங்கள் இருவரும் கடந்த ஒரு ஆண்டாக காதலித்து வருகிறோம். என்னை அவருடன் திருமணம் செய்து வையுங்கள் என்று கூறியதாக தெரிகிறது.

இதனால் தர்ஷினியிடம் நீ, சுனில் குமாரை காதலிக்காதே, முதலில் படிப்பில் கவனத்தை செலுத்து என்று பெற்றோர் கூறி சத்தம் போட்டனர்.

இது பற்றி தர்ஷினி, தனது காதலன் சுனில் குமாரிடம் தெரிவித்தார். காதலை பெற்றோர் ஏற்காததால்,காதல் தோல்வி அடைந்ததாக நினைத்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர். இருவரும் திருச்செங்கோடு அருகே உள்ள நல்லிப்பாளையம் மேம்பாலத்தின் அடியில் ஆசிட் குடித்து மயங்கி கிடந்தனர்.

இதை பார்த்த பொது மக்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இருவரையும் மீட்டு, வாகனத்தில் ஏற்றி நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். டாக்டர்கள், தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்து 2 பேருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
Tags:    

Similar News