செய்திகள்

சென்னை வந்தார் பியூஷ் கோயல்: அதிமுக-பாஜக கூட்டணி பற்றி இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை

Published On 2019-02-19 09:23 GMT   |   Update On 2019-02-19 09:23 GMT
ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் பாராளுமன்ற தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி உடன்பாடு மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பாக சென்னையில் இன்று பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். #LSpoll #PiyushGoyal #AIADMKBJPalliance
சென்னை:

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் அ.திமு.க.வுடன் கூட்டணி வைக்க பா.ஜனதா கட்சி கடும் முயற்சி செய்து வருகிறது. குறைந்தபட்சம் 10 தொகுதிகளை கேட்டு பெற வேண்டும் என்பதில் பா.ஜனதா உறுதியாக உள்ளது.
 
இதற்காக மத்திய மந்திரிகள் பியூஷ் கோயல், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருடன் இருமுறை பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர்.

குறிப்பாக, ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் கடந்த 14-ம் தேதி நடத்திய பேச்சுவார்த்தையில் இரு கட்சிகளுக்கு இடையிலான கூட்டணி உறுதிப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. எனினும்,தொகுதி பங்கீடு தொடர்பாக பேசுவதற்காக பாஜக தலைவர் அமித் ஷா இன்று சென்னை வருவதாக தகவல் வெளியானது.

பாராளுமன்ற தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணியை உறுதிப்படுத்தவும் தொகுதி பங்கீடு தொடர்பாக இறுதி செய்வதற்காகவும் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா இன்று சென்னை வருவதாக அக்கட்சி வட்டாரங்கள் நேற்றிரவு தெரிவித்தன. ஆனால், அமித் ஷாவின் பயணம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.



இந்நிலையில், ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் இன்று பிற்பகல் சென்னை வந்தார். அதிமுக தரப்பில் தமிழக அமைச்சர்கள் தங்கமணி மற்றும் வேலுமணி ஆகியோருடன் பியூஷ் கோயல் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். பிற்பகல் 2.20 மணியளவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரும் பேச்சுவார்த்தை நடக்கும் ஓட்டலை வந்தடைந்தனர்.

இன்று நடைபெறும் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு அளிக்கப்படும் இடங்களின் எண்ணிக்கை மற்றும் ஒதுக்கப்படும் தொகுதிகள் குறித்த அறிவிப்பு இன்னும் சற்று நேரத்தில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. #LSpoll #PiyushGoyal #AIADMKBJPalliance 
Tags:    

Similar News