செய்திகள்

ஈரோடு உள்பட 4 பாராளுமன்ற தொகுதி- பா.ஜனதா நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை

Published On 2019-02-14 09:25 GMT   |   Update On 2019-02-14 10:20 GMT
பாராளுமன்ற தேர்தல் களைகட்டி உள்ள நிலையில் ஈரோடு உள்பட 4 பாராளுமன்ற தொகுதி பா.ஜனதா நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை நடத்தினார். #AmitShah #bjp #parliamentelection

ஈரோடு:

பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே தேர்தல் களைகட்டி உள்ளது. வரும் தேர்தலில் தமிழகத்தில் வலுவாக கால் ஊன்ற வேண்டும் என பாரதிய ஜனதாகட்சி திட்டமிட்டுள்ளது. குறிப்பாக கொங்க மண்டலத்தை மையப்படுத்தி பாரதிய ஜனதா காய்நகர்த்தி வருகிறது. அந்த வகையில் பிரதமர் மோடி திருப்பூர் பெருமாநல்லூரில் நடந்த பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

இதை தொடர்ந்து பா. ஜனதாவின் தலைவர் அமித்ஷா கொங்கு மண்டலம் வரதிட்டமிட்டார். அதன்படி இன்று (வியாழக்கிழமை) அமித்ஷா சென்னை வந்து அங்கிருந்து விமானம் மூலம் கோவை வந்தார்.

கோவையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஈரோட்டுக்கு புறப்பட்டார். ஈரோடு சித்தோடு அடுத்த கங்காபுரம் டெக்ஸ்வேலி மைதானத்தில் ஹெலிகாப்டர் இறங்கியது.

அங்கு அமித்ஷா கொங்கு மண்டலத்தை சேர்ந்த விவசாய பிரதிநிதிகள் மற்றும் முக்கிய நெசவாளர்களை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடினார்.

அப்போது நெசவாளர்களின் பிரச்சினை அவர்களின் முக்கிய கோரிக்கை குறித்து கேட்டறிந்தார்.

அமித்ஷாவிடம் நெசவாளர் பிரதிநிதிகள் முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தனர். அதை கேட்டு கொண்ட அமித்ஷா பரிசீலிப்பதாக கூறினார்.

இதனை தொடர்ந்து ஈரோடு, திருப்பூர், கரூர், சேலம் ஆகிய 4 பாராளுமன்ற தேர்தல் பொறுப்பாளர்களை அமித்ஷா சந்தித்து பேசினார். அப்போது வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டமும் நடந்தது.

இதில் கலந்து கொண்டு பேசிய அமித்ஷா, வெற்றிக்கான வியூகங்களை பொறுப்பாளர்களுக்கு எடுத்து கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை, பொதுச்செயலாளர் முரளிதரராவ், மாநில தேர்தல் பொறுப்பாளர் சி.பி.ரவி, தேசிய செயலாளர் எச்.ராஜா, முன்னாள் தலைவர்கள் இல.கணேசன், சி.பி.ராதாகிருஷ்ணன், மற்றும் வானதி சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள். #AmitShah #bjp #parliamentelection

Tags:    

Similar News