ஆட்சியை பிடித்துவிடலாம் என்ற மு.க. ஸ்டாலினின் கனவு பலிக்காது - ஆர்.பி.உதயகுமார்
பேரையூர்:
அ.தி.மு.க. அரசின் சாதனைகளை பொது மக்களுக்கு விளக்கும் வகையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சுப்புலாபுரத்தில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தலைமையில் இன்று சைக்கிள் பேரணி நடந்தது.
இதனை தொடங்கி வைத்த அமைச்சர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பறிபோன நாற்காலிகளை பிடிப்பதற்காகவே நாற்காலி இல்லாத கிராம சபை கூட்டம் நடத்துகிறார் ஸ்டாலின். மாவட்டக் கூட்டம் நடத்தினாலே கூட்டம் கூடாது என்ற காரணத்தினால் கிராமம் கிராமாக மக்களை சந்தித்து வருகிறார்.
நின்று கொண்டு சொன்னாலும் சரி, உட்கார்ந்து மட்டும் அல்ல தலைகீழாக நின்றாலும் ஸ்டாலின் பேச்சு எடுபடாது.
தினகரன் தனது பலத்தை இழந்து வருகிறார். எனவே ஆட்கள் சேர்ப்பதற்காக ஏதாவது கூறிக்கொண்டு வருகிறார்.
கஜா புயலுக்காக 2,300 கோடியில் மத்திய அரசு 1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. அது தவிர தமிழக அரசு 1000 கோடி ஒதுக்கீடு செய்து 90 சதவீதம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் வீடுகள் வழங்கப்பட்டுள்ளது.
கஜா புயலில் வழங்கப்பட்ட நிவாரணம் புள்ளி விவரங்களாக கொடுக்கப்பட்டுள்ளது. விவசாயத்திற்கான நிவாரண தொகை கணக்கீடு செய்து வழங்கப்பட்டு வருகிறது. தவறான தகவலை பரப்பி வருகின்றனர்.
பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும் என ஸ்டாலின் 1 லட்சத்து 11 ஆயிரம் முறை கூறி விட்டார். அவர் கனவு நிறைவேறாது.
இவ்வாறு அவர் கூறினார்.