செய்திகள்

அவனியாபுரம் அருகே போலீஸ் போல் நடித்து மூதாட்டியிடம் 8 பவுன் கொள்ளை

Published On 2019-02-05 12:04 GMT   |   Update On 2019-02-05 12:04 GMT
அவனியாபுரம் அருகே போலீஸ் போல் நடித்து மூதாட்டியிடம் 8 பவுன் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
மதுரை:

மதுரை அவனியாபுரம் பகுதியில் உள்ள குருதேவ் நகரை சேர்ந்தவர் ஜெயபால். இவரது மனைவி கிருஷ்ணவேணி (வயது 67). இவர் சம்பவத்தன்று பைபாஸ் ரோட்டில் நடந்து சென்று கொண்டு இருந்தார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 டிப்- டாப் ஆசாமிகள் கிருஷ்ணவேணியை மறித்து தங்களை போலீஸ் என்று அறிமுகப்படுத்தினர்.

பின்னர் அவர்கள் இந்த பகுதியில் நகை பறிப்பு சம்பவம் அதிகரித்து வருகிறது. எனவே நகையை அணிந்து செல்ல வேண்டாம் என கூறியுள்ளனர்.

மேலும் கிருஷ்ணவேணியிடம் நகையை தாருங்கள் பேப்பரில் வைத்து தருகிறோம் என கூறியுள்ளனர்.

இதை நம்பிய கிருஷ்ணவேணி தான் அணிந்து இருந்த 8 பவுன் நகையை அவர்களிடம் கொடுத்தார். மர்ம நபர்கள் நகையை பேப்பரில் வைக்காமல் திருடிக்கொண்டு அதற்கு பதிலாக கற்களை வைத்து கொடுத்துவிட்டு சென்றனர்.

இதையறியாத கிருஷ்ணவேணி வீட்டுக்கு வந்து மர்ம நபர்கள் கொடுத்த பொட்டலத்தை திறந்து பார்த்தபோது அதில் கற்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

மதுரை ஐராவதநல்லூரை சேர்ந்தவர் மரிய பிரான்சிஸ். இவரது மனைவி சகாயரீட்டா மேரி (30). நேற்று கணவன், மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டனர். தெப்பக்குளம் ராம்நாட் ரோட்டில் சென்று கொண்டு இருந்த போது மற்றொரு மோட் டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த 2 மர்ம நபர்கள் சகாயரீட்டா மேரி கழுத்தில் கிடந்த 2½ பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பி சென்றனர்.

இதுகுறித்து தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News