தமிழ்நாடு செய்திகள்

எரியும் பிரச்சனைகளுக்கு எந்த தீர்வையும் தராத பட்ஜெட் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

Published On 2026-02-01 21:32 IST   |   Update On 2026-02-01 21:32:00 IST
  • கார்ப்பரேட் வரிகள் உயர்த்தப்படவில்லை.
  • கூடுதல் வருமான வரிச் சலுகைகள் ஏதும் அறிவிக்கப்படவில்லை.

ஒன்றிய அரசின் 2026-27 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை எரியும் பொருளாதார பிரச்சனைகள் எதற்குமே தீர்வு காண்பதாக அமையவில்லை என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், "வளர்ச்சி, மக்களின் எதிர்பார்ப்புகள், அனைவருக்குமான பயன் என்பதை மூன்று குறிக்கோள்கள் என நிதிநிலை அறிக்கை உரையை நிதியமைச்சர் துவங்கினாலும் அது உண்மையில் கார்ப்பரேட் வளர்ச்சி, செல்வந்தர்களின் எதிர்பார்ப்புகள், பெரும்பான்மை மக்களிடமிருந்து பறிப்பு என்பதாகவே அமைந்திருக்கிறது.

கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான, செல்வக்குவிப்பிற்கு வழிவகுக்கிற இன்னொரு நிதிநிலை அறிக்கையாகவே இது அமைந்திருக்கிறது. ஆகவே, எளிய நடுத்தர மக்களின் நலனுக்கோ, சிறு தொழில்களை நெருக்கடியிலிருந்து மீட்கவோ, கிராமப்புற மக்களின் மேம்பாட்டிற்கோ இந்த நிதிநிலை அறிக்கை உருப்படியான முன்மொழிவுகள் எதையும் உள்ளடக்கியதாக இல்லை.

நிதிநிலை அறிக்கையின் மிக முக்கியமான பகுதியாக திகழும் வருமான வரி திரட்டல் வர்க்க பாரபட்சத்தை வெளிப்படுத்துகிறது. இந்தியாவின் 10 சதவிகித மேல் தட்டு மக்கள் 65 சதவிகித செல்வத்தை வைத்துள்ள நிலையிலும் செல்வ வரி போன்ற ஆலோசனைகளை கருத்தில் கொள்ளவில்லை. கார்ப்பரேட் வரிகள் உயர்த்தப்படவில்லை. மறுபுறம் மத்தியதர ஊழியர்களின் எதிர்பார்ப்பான கூடுதல் வருமான வரிச் சலுகைகள் ஏதும் அறிவிக்கப்படவில்லை. வருமான வரிகளின் பங்கு கார்ப்பரேட் வரிகளை விட மொத்த வரி வசூலில் அதிகமாக உள்ளது. ஜிஎஸ்டி வரிச் சலுகைகள் அறிவித்ததாக இந்த அரசு பறைசாற்றி கொண்டாலும் வருவாய் திரட்டலில் பெருமளவு மறைமுக வரிகள் வாயிலாகவே வசூலிக்கப்படுவது சாதாரண மக்கள் மீதே சுமைகளை ஏற்றுவதாக உள்ளது.

கிராமப்புற மக்களுக்கு இந்தநிதிநிலை அறிக்கை வஞ்சனை இழைத்துள்ளது. மகாத்மா காந்தி ஊரக வேலை திட்டத்தை ஒழித்து, 100 வேலை நாட்களாக இருந்ததை 125 நாட்களாக உயர்த்தப்படுவதாக படாடோபமாக அறிவித்தாலும், அதற்கான ஒதுக்கீடு மிகக் குறைவாக உள்ளது. ஆண்டிற்கு 125 வேலை நாட்களை சராசரி நாட்கூலி ரூ 355 என்பதை கொண்டு கணக்கிட்டால் 9 கோடி பயனாளிகளுக்கு ரூ 4 லட்சம் கோடி ஒதுக்கப்பட வேண்டும். ஆனால் வி பி ஜி ராம் ஜி திட்டத்திற்கு ரூ 95692 கோடிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன. நான்கில் ஒரு பங்கு கூட இல்லை எனும் போது அரசின் பொய்மைகள் அம்பலம் ஆகியுள்ளன. கிராமப்புற மேம்பாட்டிற்கு ரூ 8000 கோடி அதாவது 4 சதவிகிதம் மட்டுமே கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது பணவீக்கத்தோடு ஒப்பிடும்போது அதிகரிப்பல்ல, உண்மை மதிப்பில் வெட்டே ஆகும். கடந்தாண்டு நிதிநிலை அறிக்கை மதிப்பீடுகளை விட கிராம சாலைகள் மேம்பாடு, கிராமப்புற மக்கள் வாழ்வாதார மேம்பாடு ஆகியவற்றுக்கான திருத்திய மதிப்பீடுகள் குறைவாக உள்ளன. நிதிநிலை அறிக்கையில் குறைவாக ஒதுக்கப்படும் தொகைகள் கூட இன்னும் குறைவாகவே மக்களுக்கு போய்ச் செல்கின்றன.

அமெரிக்காவின் 50 சதவிகித இறக்குமதி வரிகளும், அச்சுறுத்தப்படும் 500 சதவிகித உத்தேச வரிகளும் இந்திய நாட்டின் சிறுதொழில்களை கடுமையாக பாதித்துள்ள நிலையில் அவற்றின் மீட்சிக்கான நம்பிக்கையான அறிவிப்புகள் எதுவும் இல்லை. சிறு நடுத்தர தொழில் வளர்ச்சி நிதியத்திற்கு 10000 கோடி, சுயசார்பு இந்தியா நிதியத்திற்கு ரூ 2000 கோடி என்ற அறிவிப்புகள் எல்லாம் யானை பசிக்கு சோளப் பொரி போன்றதே ஆகும்.

இந்திய நாட்டின் பெரும் பிரச்சனையாக உள்ள வேலையின்மைக்கு நிதிநிலை அறிக்கை உரிய கவனம் எதுவும் செலுத்தவில்லை. 15-29 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் மத்தியில் 14 சதவிகித வேலையின்மை நிலவுகிற சூழலில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டமும், வேலை வாய்ப்பு ஊக்கத்தொகை திட்டமும் கார்ப்பரேட்டுகளுக்கு பயனளித்துள்ளனவே தவிர, வேலை வாய்ப்புகளில் பிரதிபலிக்கவில்லை. ஆதாரத் தொழில் வளர்ச்சிக்கான பொது முதலீடுகள் தனியார் முதலீடுகளை ஊக்குவித்து வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்கிற சூத்திரமும் நடைமுறையில் பொய்த்து போய் உள்ளது. கல்வி, சுகாதார ஒதுக்கீடுகளிலும் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்போடு ஒப்பிடும் போது குறிப்பிடத்தக்க உயர்வும் இல்லை.

பொதுத்துறை பங்கு விற்பனைக்கு 80000 கோடி ரூபாய் இலக்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரசின் பங்குகளை 51 சதவிகிதத்திற்கும் கீழே 26 சதவிகிதம் வரை கூட குறைக்கலாம் என்பதும் அபாயகரமான முன்மொழிவு. அரசு உடமை என்பதிலிருந்து அரசின் கட்டுப்பாடு என்பதாக தரம் இறக்குவது எதிர்காலத்தில் முழுமையாக தனியார்கள் வசம் ஒப்படைப்பதற்கான திட்டமே தவிர வேறொன்றுமில்லை. இத்தகைய முன்மொழிவு இட ஒதுக்கீடு உள்ளிட்ட சமூக நீதி ஏற்பாடுகள் மீதும் கடும் பாதிப்பினை ஏற்படுத்தும்.

தமிழ்நாட்டின் நீண்ட கால கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. ரயில்வே திட்டங்களில் வஞ்சனை தொடர்ந்து உள்ளது. அரிய வகை கனிம வளங்கள் பற்றிய அறிவிப்பு கார்ப்பரேட் சுரண்டலுக்கான வழி ஏற்படுத்திக் கொடுப்பதே ஆகும். கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. கீழடிக்கான எந்த நிதி ஒதுக்கீடும் இல்லை. மாநிலங்களுக்கான நிதி பங்கீட்டில் உயர்வு வேண்டும் என்ற கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

ஆகவே, எந்த வகையிலும் தேசத்தின் நலனுக்கோ, மக்களின் வாழ்வுக்கோ, தமிழ்நாட்டின் உரிமைக்கோ உதவாத இந்த நிதிநிலை அறிக்கையை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில செயற்குழு குழு வன்மையாக கண்டிக்கிறது. இந்த நிதிநிலை அறிக்கையை எதிர்த்து மக்கள் அனைவரும் கண்டன குரல் எழுப்பிட முன்வருமாறு அனைத்து பகுதி மக்களையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News