செய்திகள்

மார்த்தாண்டம் அருகே கணவர் வீடு முன்பு இளம்பெண் தர்ணா- மகளிர் போலீசார் விசாரணை

Published On 2019-01-23 10:40 GMT   |   Update On 2019-01-23 10:40 GMT
மார்த்தாண்டம் அருகே இளம்பெண்ணை கணவர் வீட்டில் அனுமதிக்காததால் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மார்த்தாண்டம்:

மார்த்தாண்டத்தை அடுத்த முண்டவிளை பகுதியை சேர்ந்தவர் ரமா (வயது 24). ரமாவுக்கும் கோட்டகம் பகுதியை சேர்ந்த மகேஷ் என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். மகேஷ் வெளிநாட்டில் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

திருமணம் முடிந்த ஓராண்டுக்கு பிறகு கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

கணவருடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக ரமா, பெற்றோர் வீட்டிற்கு சென்றார். அதன்பிறகு உறவினர்கள் இருவருக்கும் இடையே சமரசம் பேசினர். இதில் உடன்பாடு ஏற்பட்டு இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ்ந்தனர்.

இந்த நிலையில் மீண்டும் அவர்களுக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டதை தொடர்ந்து ரமா, பெற்றோர் வீட்டிற்கு சென்றார். சமீபத்தில் மகேஷ் வெளிநாட்டில் இருந்து ஊர் திரும்பினார்.

ஊர் திரும்பிய மகேஷ், மனைவியை சந்திக்க வில்லை. எனவே கணவரை பார்க்க ரமா,நேற்று அவரது வீட்டுக்கு சென்றார். ஆனால் கணவரின் பெற்றோர் அவரை வீட்டுக்குள் அனுமதிக்க வில்லை.

மேலும் வீட்டில் இருந்த ரமாவின் பொருள்களை கொடுத்து அவரை அங்கிருந்து செல்லும்படி கூறினர். இதனால் அதிர்ச்சி அடைந்த ரமா, தனது குழந்தையுடன் கணவர் வீடு முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இது பற்றி அக்கம் பக்கத்தினர் மார்த்தாண்டம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவம் பற்றி விசாரித்தனர்.

இன்று ரமா, இது பற்றி மார்த்தாண்டம் மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News