தமிழ்நாடு செய்திகள்

முன்னேற்பாடுகள் தீவிரம்: ஜனாதிபதி திரவுபதி முர்மு நாளை வேலூர் வருகை

Published On 2025-12-16 09:14 IST   |   Update On 2025-12-16 09:14:00 IST
  • ஜனாதிபதி வருகையையொட்டி கோவில் பகுதியில் 2 அடுக்கு பாதுகாப்பு போடப்படுகிறது.
  • தங்கக்கோவிலில் ஜனாதிபதி தியான மண்டபத்தை திறந்து வைத்து, சாமி தரிசனம் செய்கிறார்.

வேலூர்:

ஜனாதிபதி திரவுபதி முர்மு நாளை வேலூர் ஸ்ரீபுரம் தங்கக்கோவில் வளாகத்தில் கட்டப்பட்டுள்ள தியான மண்டபத்தை திறந்து வைப்பதற்காக வருகை தர உள்ளார். இதையொட்டி வேலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக வேலூர் நகரம் மற்றும் குறிப்பாக தங்கக்கோவில் சுற்றியுள்ள வளாகப் பகுதி முழுவதும் 1,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப்பணியில் ஈடுபட உள்ளனர். கோவில் சுற்றியுள்ள அரியூர் பகுதிகளில் அமைந்துள்ள தங்கும் விடுதிகளில் வெளி மாநிலத்தவர்கள், வெளிநாட்டினர் யாரேனும் தங்கி உள்ளார்களா? சந்தேகப்படும் நபர்கள் தங்கி உள்ளார்களா? என்பது குறித்து போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, பாதுகாப்பு தொடர்பாக தமிழ்நாடு சிறப்பு பாதுகாப்புப்படை போலீசாரும் வேலூரில் முகாமிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். சிறப்பு பாதுகாப்புப்படையைச் சேர்ந்த 3 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் தலைமையிலான குழுவினர் கோவில் சுற்று வட்டாரப் பகுதியை தங்கள் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வந்துள்ளனர்.

ஸ்ரீபுரத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக மாவட்ட கலெக்டர் சுப்புலெட்சுமி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன், சிறப்பு பாதுகாப்புப்படையைச் சேர்ந்த போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் ஆகியோர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.

ஜனாதிபதி வருகையையொட்டி கோவில் பகுதியில் 2 அடுக்கு பாதுகாப்பு போடப்படுகிறது. ஜனாதிபதி நாளை காலை 11.05 மணிக்கு திருப்பதியில் இருந்து ஸ்ரீபுரத்துக்கு வருகிறார். அவர் ஹெலிகாப்டரில் வர உள்ளதால் அவருடன் கூடுதலாக 2 ஹெலிகாப்டர்களும் பாதுகாப்பு கருதி வர உள்ளது. அந்த 2 ஹெலிகாப்டர்களில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த அதிகாரிகள் பயணம் செய்ய உள்ளனர்.

தங்கக்கோவிலில் ஜனாதிபதி தியான மண்டபத்தை திறந்து வைத்து, சாமி தரிசனம் செய்கிறார். தொடர்ந்து மதியம் 12.30 மணி அளவில் மீண்டும் ஹெலிகாப்டரில் திருப்பதிக்கு புறப்பட்டுச் செல்கிறார்.

அவர் வருகை தரும் நேரத்தில் ஸ்ரீபுரம் -ஊசூர் சாலையில் போக்குவரத்துத் தடை செய்யப்பட உள்ளது.

அவரது வருகையை ஒட்டி தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியும் சாலை மார்க்கமாக சென்னையில் இருந்து ஸ்ரீபுரத்துக்கு நாளை காலை வருகை தர உள்ளார்.

இந்த நிலையில் நேற்று ஜனாதிபதி வருகையை முன்னிட்டு ஹெலிகாப்டர் சோதனை ஓட்டமும், பாதுகாப்பு ஒத்திகையும் நடந்தது.

Tags:    

Similar News