செய்திகள்

குடிக்க பணம் இல்லாததால் டாஸ்மாக் கடையில் திருடினோம் - கைதானவர்கள் பரபரப்பு தகவல்

Published On 2019-01-19 13:18 GMT   |   Update On 2019-01-19 13:18 GMT
நாகர்கோவிலில் குடிக்க பணம் இல்லாததால் டாஸ்மாக் கடையில் திருடியதாக கைதான சகோதரர்கள் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
நாகர்கோவில்:

நாகர்கோவில் பார்வதிபுரம் நாடான்குளத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் சுவரில் துழைபோட்டு 63 மதுபாட்டில்கள் திருடப்பட்டது.

இதுகுறித்து வடசேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். கொள்ளையர்களை பிடிக்க சப்-இன்ஸ்பெக்டர் அருளப்பன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பாக அந்த பகுதியில் விசாரணை மேற்கொண்டனர். அப்போது திருவள்ளுவர் தின விடுமுறை நாளிலும் அதே பகுதியை சேர்ந்த சிலர் மதுபானங்களை அதிகளவு பதுக்கிவைத்து குடித்தது தெரியவந்தது.

இதுதொடர்பாக அழகன்பாறை, அழகர்கோணத்தை சேர்ந்த சங்கர் (வயது 25) மற்றும் அவரது 18 வயது சகோதரர் ஒருவரும், தங்கத்துரை (28), மணிவண்ணன் (23) மற்றொரு 16 வயது சிறுவனையும் பிடித்தனர். இவர்கள் டாஸ்மாக் கடையில் திருடியதை ஒப்புக் கொண்டனர். போலீசார் 5 பேரையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:- எங்களுக்கு குடிக்க பணம் இல்லாததால் ஒதுக்குப்புறம் பகுதியில் டாஸ்மாக் கடையில் திருடுவதற்கு திட்டமிட்டோம். சம்பவத்தன்று டாஸ்டாக் கடையின் பின் பக்க சுவரை துளைபோட்டோம். பின்னர் நாங்கள் அந்த துளை வழியாக உள்ளே புகுந்து விலை உயர்ந்த மதுபான பாட்டில்களை திருடினோம். அந்த பகுதியில் இருந்து மது அருந்தினோம். மீதம் இருந்த மதுபாட்டில் களை மறைத்துவைத்தோம். டாஸ்மாக் விடுமுறைதினமான திருவள்ளுவர் தினத்தன்றும் நாங்கள் அதிகமாக மது அருந்திக்கொண்டு இருந்தோம். அப்போது போலீசார் எங்களை பிடித்துவிட்டனர்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

கைது செய்யப்பட்ட 16 வயது சிறுவனில் ஒருவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து அவரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மற்றொரு சிறுவனை நெல்லையில் உள்ள சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர். தங்கத்துரை, சங்கர், மணிவண்ணன் ஆகிய 3 பேரை ஜெயிலில் அடைத்தனர். சங்கர் மீது ஏற்கனவே ஆரல்வாய்மொழி, கோட்டார் போலீஸ் நிலையத்தில் திருட்டு வழக்கு உள்ளது. தங்கத்துரை மீது நேசமணிநகர் போலீஸ் நிலையத்தில் திருட்டு வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கதாகும். #tamilnews
Tags:    

Similar News