செய்திகள்

அன்னூரில் மூதாட்டியை ஏமாற்றி ரூ.50 லட்சம் மோசடி- 2 பேர் மீது வழக்குப்பதிவு

Published On 2019-01-14 10:11 GMT   |   Update On 2019-01-14 10:11 GMT
கோவை மாவட்டம் அன்னூரில் வங்கியில் கடன் பெற்றுதருவதாக கூறி மூதாட்டியிடம் ரூ.50 லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக கூறி 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அன்னூர்:

அன்னூர் அருகே உள்ள நாகமாபுதூரைச் சேர்ந்தவர் சின்னச்சாமி. இவரது மனைவி ராஜம்மாள் (வயது 52).

இவர் தனது பேரனின் மருத்துவ படிப்புக்காக மகன் மற்றும் மருமகன் பெயரில் உள்ள சொத்துக்களை அடமானம் வைத்து கடன் பெற முயற்சி செய்து வந்தார்.

அப்போது கோவையை சேர்ந்த தன்ராஜ், ஜெசிந்தா மேரி ஆகிய 2 பேர் ராஜம்மாளை தொடர்பு கொண்டனர். தன்ராஜ் வங்கியில் வேலை செய்வதாக கூறிய அவர்கள் வங்கியில் கடன் பெற்றுத் தருவதாக தெரிவித்துள்ளனர்.

இதை நம்பிய ராஜம்மாள் கோவை வங்கிக்கு சென்று அசல் பத்திரம் மற்றும் கடன் பெற தேவையான ஆவணங்களை கொடுத்து கையெழுத்து போட்டுள்ளார்.

அப்போது சில வாரங்களில் ரூ.50 லட்சம் ராஜம்மாள் கணக்கில் வந்துவிடும் என தெரிவித்து உள்ளனர். பல மாதங்கள் ஓடி விட்டன. பணம் வங்கி கணக்கில் வரவில்லை.

ஆனால் வங்கியில் இருந்து ரூ.50 லட்சத்துக்கு வட்டி செலுத்த வேண்டும் என ராஜம்மாளுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜம்மாள் அன்னூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் தன்ராஜ் மற்றும் ஜெசிந்தா மேரி மீது மோசடி உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரனை செய்து வருகிறார்கள்.
Tags:    

Similar News