தமிழகத்தில் பா.ஜனதா கூட்டணி அமைத்தே போட்டியிடும் - பொன்.ராதாகிருஷ்ணன்
ஆலந்தூர்:
மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
தமிழகத்தில் பா.ஜனதா கடந்த 2014-ம் ஆண்டு இருந்த நிலையில் இப்போது இல்லை. வளர்ச்சி அடைந்துள்ளது. தமிழகத்தில் பா.ஜனதாவின் நிலை எப்படி இருக்கிறதோ அதை சார்ந்து தான் தேர்தல் முடிவு இருக்கும்.
2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலை கூட்டணியுடன் தான் சந்திக்க வேண்டும் என்ற நிலையில் எல்லா கட்சிகளும் உள்ளன. பா.ஜ.க.வும் அதே நிலைப்பாட்டில் தான் இருக்கிறது.
அதே நேரத்தில் எந்த கட்சியோடும் ஒட்டிபோக வேண்டும் என்ற ஏக்கத்தில் பா.ஜனதா இல்லை. சம உணர்வோடு யார் வருகிறார்களோ அவர்களோடு கூட்டணி.
தமிழகத்தில் பா.ஜனதா தலைமையில் கூட்டணி அமையுமா? அல்லது மற்ற கட்சியின் தலைமையை ஏற்குமா? என்று இப்போது கருத்து கூற விரும்பவில்லை. நாங்கள் கூட்டணி அமைத்து போட்டியிடுவோம்.
3 பெண்களுக்கு எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்டதாக புகார் வந்துள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இயற்கை பேரிடரின் போது அரசு தானாக முன்வந்து எப்படி இழப்பீடு தருகிறதோ அதேபோல் இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு தானாக முன்வந்து இழப்பீடு கொடுப்பதுடன் வாழ் நாள் முழுவதும் சிகிச்சை செலவை ஏற்க வேண்டும்.
மோடியின் வெளிநாட்டு பயணத்தால் பணம் செலவாகிறது என்ற குற்றச்சாட்டு சரியானது அல்ல. இந்த பயணத்தால் வெளிநாட்டின் முதலீடுகள், திட்டங்கள் எவ்வாறு வந்திருக்கிறது என்று பாருங்கள்.
இவ்வாறு அவர் கூறினார். #PonRadhakrishnan