செய்திகள்

செந்துறையில் லாரி மோதி தொழிலாளி பலி- கர்ப்பிணி மனைவி கண்ணீர்

Published On 2018-12-28 16:34 GMT   |   Update On 2018-12-28 16:34 GMT
செந்துறையில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் தொழிலாளி சம்பவ இடத்திலேயே பலியானார். 10 ஆண்டுகளுக்கு பிறகு குழந்தை பிறக்க இருந்த நிலையில் கர்ப்பிணி மனைவி கண்ணீர் விட்டு கதறினார்.
செந்துறை:

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள ஆதிக்குடிக்காடு கிராமத்தை சேர்ந்த பொன்னுசாமி மகன் சுப்ரமணியன் (வயது 38), விவசாயி. இவர் செந்துறையில் இருந்து ராயம்புரம் நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது ராயம்புரம் காலணி  அருகே சென்றபோது, எதிரே கான்கிரீட் ஏற்றிவந்த டிப்பர் லாரி நேருக்கு நேராக மோதியது. இதில் பைக்கில் சென்ற சுப்பிரமணியன் சுமார் 50 அடி தூரம் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவலறிந்த அவரது உறவினர்கள் லாரி டிரைவரை கைது செய்வதோடு, இறந்தவர் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த திடீர் மறியல் போராட்டத்தால் செந்துறை-அரியலூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த செந்துறை போலீசார் விவசாயியின் உறவினர்களி டம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனை தொடர்ந்து அவர்கள் சாலை மறியலை கைவிட்டனர். மேலும் விபத்தினை ஏற்படுத்திய வடவீக்கம் கிராமத்தை சேர்ந்த லாரி டிரைவர் பாலமுருகனை கைது செய்தனர். 

மேலும் விபத்தில் உயிரிழந்த சுப்பிரமணியன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் இறந்த சுப்பிரமணிக்கு மலர்கொடி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்து வந்த நிலையில், தற்போது மலர்கொடி கர்ப்பிணியாக உள்ளார். இன்னும் ஒரு வார காலத்திற்குள் அவருக்கு குழந்தை பிறக்கலாம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதனால் மலர்கொடிக்கு அவரது பெற்றோர் வளைகாப்பு நடத்த ஏற்பாடு செய்துள்ளனர். இந்த நிலையில் சுப்பிரமணியன் விபத்தில் இறந்த சம்பவம் கேட்டு கர்ப்பிணியான அவரது மனைவி கண்ணீர் விட்டு கதறினார். சுப்ரமணியன் உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினர் மற்றும் கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.    
Tags:    

Similar News