செய்திகள்
கீரனூர் அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்த இளம்பெண்
கீரனூர் அருகே மாடு விரட்டியதில் கிணற்றுக்குள் தவறி விழுந்த இளம்பெண்ணை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
கீரனூர்:
கீரனூர் அருகே உள்ள மங்கதேவன்பட்டியை சேர்ந்த சின்னப்பா என்பவரின் மகள் மீனா (வயது 23). அப்பகுதியில் உள்ள வயலில் வேலைபார்த்து கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த காளைமாடு விரட்டியது. இதில் எதிர்பாராத விதமாக அங்குள்ள 30அடி அகலம், 60 அடி ஆழம் கொண்ட கிணற்றில் மீனா தவறி விழுந்து விட்டார்.
கிணற்றுக்குள் குறைந்த அளவு தண்ணீரே கிடந்ததால் லேசான காயங்களுடன் மேலே ஏற முடியாமல் அலறினார்.
சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் கீரனூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். நிலைய அலுவலர் செல்லத்துரை தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று கயிறு மூலம் கிணற்றுக்குள் தவித்த மீனாவை மீட்டு கீரனூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.